கடந்த ஒரு மாதமாக மீன் வரத்து வெகுவாக குறைந்திருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 250 விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றன. மீன் வரத்து குறைவால், துறைமுகத்திலிருந்து சந்தைக்கு வாங்கிச் செல்லும் மீன்கள் அதிக விலை கொடுத்து வாங்க நேரிடுவதாக சிறிய மீன் வியாபாரிகள் கூறுகின்றனர். இதற்கேற்றார்போல் உள்ளூர் சந்தையில் மீன் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
இதுகுறித்து விசைப்படகு உரிமையாளரும், காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி மீனவரணித் தலைவருமான ஏ.எம்.கே.அரசன் புதன்கிழமை கூறியது :
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு ஒரு மாத காலமாக மீன் வரத்து குறைந்திருப்பது உண்மைதான். மிகுந்த எதிர்பார்ப்பில் கடலுக்கு சென்று திரும்பும்போது ஏமாற்றம் ஏற்படுகிறது. குறைந்தது ரூ.1 முதல் ரூ.1.50 லட்சம் வரை செலவு செய்து திரும்பும்போது, முதலீட்டுக்கு இழப்பு ஏற்படும் வகையிலேயே மீன் கிடைக்கிறது. கோடியக்கரைக்கு தென்கிழக்குப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. இலங்கை கடற்படையினர் பிடிக்கின்றனர். ஆந்திர பகுதியை நோக்கிச் செல்ல முயற்சித்தால், அந்தப் பகுதியினர் தடுக்கின்றனர். மற்ற இடைப்பட்ட பகுதிகளில் மீன் எதிர்பார்க்கும் அளவில் இல்லை. இந்த நிலை நிகழாண்டில் கடந்த ஒரு மாதமாகவே நிலவிவருகிறது.
கிளிசல் என்கிற கழிவு மீன் காரைக்காலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் கிடைக்கிறது. இது ஓரளவு வருகிறது. இது உணவுக்கான மீன் அல்ல. இதனால் பெரும்பாலான விசைப்படகுதாரர்கள் பாதிப்பை சந்தித்துவருகிறார்கள். எனினும் விரைவில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் கடலுக்குச் சென்று வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.