மதுரை விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று மக்களவையில் விருதுநகர் தொகுதி அதிமுக உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை விதி எண் 377-இன்கீழ் அவர் முன்வைத்த கோரிக்கை:
மதுரை ஒரு முக்கியமான மையமாக இருப்பதால் எட்டு தென் மாவட்டங்கள் தங்களது தேவைக்காக மதுரை விமான நிலையத்தைச் சார்ந்துள்ளன. தற்போது, மதுரை விமான நிலையத்தில் சுங்கம் அனுமதி வசதி கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் மூலம், ஓர் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளுக்கு மேல் கையாள முடியும். எனினும், மதுரை விமான நிலையம் இரு தரப்பு விமான சேவை உடன்படிக்கையில் (பிஏஎஸ்ஏ ) சேர்க்கப்படாததால் இலங்கை விமான நிறுவனம் தவிர இதர நாடுகளுக்கு பன்னாட்டு விமானங்கள் இயக்க முடியாத நிலைமை உள்ளது.
பல்வேறு மத்திய கிழக்கு மற்றும் தூர கிழக்கு நாடுகளின் பிஏஎஸ்ஏ-இல் மதுரை விமான நிலையம் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர் (மலேசியா), சவூதி அரேபியா, அபுதாபி, மஸ்கட் போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மூலம் நேரடி பன்னாட்டு விமானங்களை இயக்குவதற்கு தடையாக இருந்து வருகிறது. இதனால், பல்வேறு மத்திய கிழக்கு மற்றும் தூர கிழக்கு நாடுகளின் இருதரப்பு விமான சேவை உடன்படிக்கையில் மதுரை விமான நிலையத்தைச் சேர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் மதுரையில் இருந்து இந்த நாடுகளுக்கு நேரடி விமான சேவையை வெளிநாட்டு விமான நிறுவனங்கள் அறிமுகப்படுத்த முடியும் என்றார் அவர்.
விழுப்புரம் முன்மாதிரி ரயில் நிலையம் ஆக்கப்படுமா?: விழுப்புரம் ரயில் நிலையத்தை முன்மாதிரி ரயில் நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி அதிமுக உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை விதி எண் 377-இன் கீழ் அவர் முன்வைத்த கோரிக்கை: விழுப்புரமானது நகராட்சியாகவும் மாவட்டத்தின் நிர்வாக தலைநகரமாகவும் தமிழகத்திலேயே மிகப்பெரிய மாவட்டமாகவும் உள்ளது. தமிழகத்தின் முக்கிய அனைத்து நகரங்களுக்கும் ரயில்வே மூலம் இந்நகரம் இணைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ரயில் நிலையம் சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் பகுதிகளான திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுச்சேரி, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளை நோக்கிச் செல்லும் ரயில் போக்குவரத்தின் முக்கிய விநியோக புள்ளியாகவும் சேவையை அளித்து வருகிறது. ஆனால், விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்பில் உள்கட்டமைப்பு வசதி போதுமானதாக இல்லை. இந்த ரயில் நிலையம் வழியாக இரவிலும் பகலிலும் ஏராளமான ரயில்கள் கடந்து செல்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு இந்த ரயில் நிலையத்திற்கு பெருமை அந்தஸ்து அளித்து ஒரு முன்மாதிரி ரயில் நிலையமாக தரம் உயர்த்த மத்திய அரசும், ரயில்வே அமைச்சகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








