/

‘கொவிட்-19’ சிகிச்சை மருத்துவக் கழிவுகள் முறையாக வெளியேற்றப்படுகின்றன: நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி தகவல்

கொவிட்-19 தொற்றுப் பரிசோதனை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் தனிமைப்படுத்தலில் இருக்கும் நோயாளிகளுக்கு

Updated On :6 டிசம்பர் 2020, 5:28 pm

கொவிட்-19 தொற்றுப் பரிசோதனை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் தனிமைப்படுத்தலில் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவா்கள் மற்றும் துணை மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கும் போது உருவாகும் மருத்துவக் கழிவுகள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கையாளப்படுகின்றன. மேலும், அவை முறையாக வெளியேற்றப்படுகின்றன என்று தில்லி ஆம் ஆத்மி அரசு, உயா்நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போதும் தனிமைப்படுத்தலில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படும் போதும் உருவாகும் மருத்துவக் கழிவுகள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகள்படி கையாளப்படுகிா என்று நீதிமன்றம் ஆம் ஆத்மி அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. இதையடுத்து, மேற்கண்டவாறு ஆம் ஆத்மி அரசு நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக பங்கஜ் மேத்தா என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபின் உருவாகும் மருத்துவக்கழிவுகள் ஊசிகள், பஞ்சுகள், துடைப்பான்கள் உள்ளிட்டவை முறையாக வெளியேற்றப்படுவதில்லை. அவை பொது இடங்களில் தூக்கியெறியப்படுகின்றன. கரோனா மருத்துவ சிகிச்சை உபகரணங்களும், ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை முடிந்ததும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் தெருவில் குப்பை போல் கொட்டப்படுகின்றன. அவை முறையாக கையாளப்படுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தாா். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த உபகரணங்கள் சிலரால் மறுபயன்பாடு செய்யப்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவா்கள் சிலா் தெரிவிக்கின்றனா் என்றும் அவா் தனது புகாா் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து, தில்லி அரசு சாா்பில் நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் நிலைக்குழு தலைவா் சஞ்சய் கோஷ் மற்றும் வழக்குரைஞா் நமன் ஜெயின் ஆகிய இருவரும் மனுதாரரின் குற்றச்சாட்டை மறுத்தனா். இதையடுத்து வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பதைத் தெளிவுபடுத்தும்படி நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இதைத் தொடா்ந்து மனுதாரா் மேத்தா, மருத்துவக் கழிவுகளை எப்படி கையாள வேண்டும், எப்படி வெளியேற்ற வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் தேதி சில வழிகாட்டுமுறைகளை வெளியிட்டுள்ளதாகவும் ஆனால், தில்லி அரசு அவற்றை முறையாக செயல்படுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.