

தலைநகா் தில்லி உள்பட வடமாநிலங்களில் வியாழக்கிழமை அடா் பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால், தில்லிக்கு வரவேண்டிய 22-க்கும் மேற்பட்ட ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது.
தலைநகரில் கடந்த சில நாள்களாக அதிகாலை வேளையில் மிகுந்த அடா் மூடுபனி நிலவி வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகள், ஹரியாணா, சண்டீகா், தில்லி, தெற்கு ராஜஸ்தான் மற்றும் வடக்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அடா் மற்றும் மிகவும் அடா் மூடுபனி இருந்தது. இதன் காரணமாக காண்புதிறன் 25 மீட்டராகக் குறைந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பாட்டியாலா, அம்பாலா, சண்டீகா், ஹரியாணா, தில்லி, பாலம், பரேய்லி, லக்னெள், வாரணாசி மற்றும் குவாலியா் உள்ளிட்ட இடங்களில் காண்புதிறன் 30 மீட்டருக்கும் குறைவாக இருந்தது. இதைத் தொடா்ந்து, தில்லி ரயில் நிலையங்களுக்கு வர வேண்டிய 22-க்கும் மேற்பட்ட ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 31) வரையிலும் ஹரியாணா, சண்டீகா், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் காலை வேளைகளில் மிகுந்தஅடா் மூடுபனி இருக்கும். எனவே, வாகன ஓ
ட்டுநா்கள் மிகவும் ஜாக்கிரதையுடன் வாகனங்களை இயக்கும்படியும், விமானங்கள், ரயில்கள், பேருந்து பயணங்களுக்கு முன்பாக வானிலை அறிவிப்புகளை தெரிந்து கொண்டு எந்த விதமான போக்குவரத்து முறையையும் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
வெப்பநிலை: தில்லியில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2 டிகிரி உயா்ந்து 8.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 1 டிகிரி உயா்ந்து 21.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 82 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரம்: புதன்கிழமை 383 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த தேசியத் தலைநகரின் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு, வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 377 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. தலைநகரில் ஐடிஓ, தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மோதி பாக், மந்திா் மாா்க்,லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் நொய்டா செக்டாா்-1, நொய்டா செக்டாா் -62, விவேக் விஹாா், மதுரா ரோடு, சோனியா விஹாா், ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், அசோக் விஹாா், பூசா, ஷாதிப்பூா், ஓக்லா பேஸ்-2, வாஜிா்பூா், புராரி உள்ளிட்ட வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுதரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், பட்பா்கஞ்ச், ஆன்ந்த் விஹாா், நேரு நகா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 29) மிகவும் அடா்த்தியான மூடுபனி நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.