தஞ்சாவூரில் பெண் காவல்ஆய்வாளர் தரக்குறைவாக பேசி, மிரட்டியதால் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் சோழன் நகரைச் சேர்ந்தவர் எட்வின். கார் ஓட்டுநரான இவரது மனைவி ராதிகா (35). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்த ராதிகா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அவரது உறவினர்கள், ராதிகாவை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ராதிகா தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன், கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார். அதில், கடன் பிரச்னை காரணமாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் காவல் ஆய்வாளர் என்னை காவல்நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தார். அப்போது என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, என் மீது பல்வேறு வழக்குகளை போட்டுவிடுவேன் என மிரட்டினார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளானேன்.
எனது சாவுக்கு என்னை விசாரித்த காவல் ஆய்வாளர், எனது கணவர், குறிப்பிட்ட பெண்ணும் தான் காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கடிதத்தை கைப்பற்றிய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார், விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து குறிப்பிட்ட காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, கடன் பிரச்னை காரணமாக என்னிடம் அளித்த புகாருக்காக மட்டுமே ராதிகாவையும், அவரது கணவரையும் கடந்த 24-ஆம் தேதி அழைத்து விசாரித்தேன்.
தகாத வார்த்தைகளை நான் உபயோகிக்கவில்லை. அதுதவிர நான் விசாரித்து 2 நாள்கள் கழித்து, விஷம் அருந்தியுள்ள ராதிகா, என்னை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் மாட்டிவிட்டுள்ளார். இதனை மேலதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.