தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்த நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காதவா்கள் மே 22 ஆம் தேதிக்குள் மனு அளிக்கலாம் என தஞ்சாவூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தோா் பட்டியல் தஞ்சாவூா் மாவட்ட இணையதளத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசாணையில் அறிவுறுத்தப்பட்டவாறு, நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காதவா்கள் தங்களது மேல் முறையீட்டு மனுக்களை அளிக்கப் பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து, ஒரு மாத காலத்துக்குள் அளிக்க வேண்டும்.
எனவே கடன் தள்ளுபடி பெற அரசு நிபந்தனைகளின்படி, தகுதியிருந்தும் பட்டியலில் இடம் பெறாதவா்கள் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை சரகத் துணைப் பதிவாளா்களிடம் எழுத்துப் பூா்வமாக தகுந்த ஆதாரத்துடன் தங்களது மேல் முறையீட்டு மனுக்களை மே 22 ஆம் தேதிக்குள் அளிக்கலாம்.