கடலூர்: நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக அதிகரிக்க வேண்டும். வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். கூலியை உயர்ந்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளான ஏஐடியுசி, இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூரில் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைப்பினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் குவிந்தனர். ஆனால், பேரணியாகச் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், கோரிக்கைகளுக்கு பதிலாக காவல்துறையினரை கண்டித்து அமைப்பினர் திடீர் முழக்கமிட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.