வெள்ள சேத அறிக்கை தயார் செய்வதில் சுணக்கம்

புதுச்சேரி, ஜன.  8: புதுச்சேரியில் வெள்ளச் சேதங்களை மதிப்பிட்டு மத்திய அரசிடம் நிவாரண நிதி கோருவதற்கான அறிக்கை தயார் செய்வதில் புதுச்சேரி அரசு சுணக்கம் காட்டி வருகிறது. அண்மையில் பெய்த தொடர் மழையின்போ
Updated on
2 min read

புதுச்சேரி, ஜன.  8: புதுச்சேரியில் வெள்ளச் சேதங்களை மதிப்பிட்டு மத்திய அரசிடம் நிவாரண நிதி கோருவதற்கான அறிக்கை தயார் செய்வதில் புதுச்சேரி அரசு சுணக்கம் காட்டி வருகிறது.

அண்மையில் பெய்த தொடர் மழையின்போது, 4 பேர் இறந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். இதைத் தவிர கால்நடைகள் இறப்பு, சாலைகள் பழுது, விவசாய நிலங்கள் பாதிப்பு, பயிர் சேதம் போன்றவை பெருமளவில் ஏற்பட்டுள்ளன.

இது போன்ற பாதிப்புகளைக் கண்டறியவும், ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தயார் செய்யவும் தமிழகத்தில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

மழையின் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை விவரித்து ரூ. 1800 கோடி அளவுக்கு அங்குள்ள அரசு நிதியுதவியை கோரியுள்ளது.

அதற்காக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தவிர தமிழகத்தில் மழையின் பாதிப்புகளை மத்திய அரசின் குழு ஆய்வு செய்து இப்போது மத்திய அரசுக்கும் அந்தக் குழு அறிக்கை அளித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் அண்மையில் சென்னைக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் கருணாநிதி மழை பாதிப்புக்கான நிவாரண நிதியை விரைந்து அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதனால் தமிழகத்துக்கு மழை நிவாரண நிதி விரைவில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பிரதமரை புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் சந்தித்தபோது, அது போன்ற கோரிக்கை எதையும் வைக்க முடியவில்லை.

காரணம், இன்னும் மத்திய அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. புதுச்சேரி அரசு ஒவ்வொரு துறையாக தங்கள் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறிப்பிட்டு நிவாரண நிதி எவ்வளவு வேண்டும் என்பதைக் குறிப்பிடவேண்டும்.

எல்லா துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் வருவாய்த்துறை கூட்டங்களை நடத்தியும், இந்த அறிக்கை தயார் செய்ய பல்வேறு வழிகாட்டுதல்களை அளித்தப் பிறகும் கூட பல்வேறு துறைகள் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தன.

இப்போது பெரும்பாலும் எல்லா துறைகளும் கொடுத்தாகிவிட்டது என்ற நிலையில் புதுச்சேரி அரசின் பெரிய துறையான பொதுப்பணித்துறை இன்னும் தங்கள் துறை பாதிப்புகள் குறித்து அறிக்கை தயார் செய்யாமல் இருக்கிறது. இதனால் புதுச்சேரி அரசின் ஒட்டுமொத்த மழை பாதிப்பு அறிக்கை தயார் செய்வதில் தொடர்ந்து சுணக்கம் நிலவி வருகிறது.

இதனால் பலத்த மழையின்போது, புதுச்சேரிக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தெளிவான அறிக்கை வெளியிட முடியாத சூழ்நிலை இருக்கிறது.

மழையின் பாதிப்பைக் காரணம் காட்டி ஏற்கெனவே புதுச்சேரி அரசு அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ. 1000 நிவாரணம் வழங்கியுள்ளது.

இதற்கு மட்டும் புதுச்சேரி அரசின் நிதியிலிருந்து ரூ. 32 கோடி செலவிடப்பட்டுள்ளது. அறிக்கை தயார் செய்ய முடியாததால் விவசாயிகள், மீனவர்கள் போன்றவர்களுக்கு இதுவரை நிவாரண நிதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இன்னும் புதுச்சேரிக்கு மத்திய அரசின் குழுவும் வந்து செல்லவில்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மழை நிவாரணத்தைப் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் அரசு ஆர்வம் காட்டுகிறது.

ஆனால் அதிகாரிகள் ஒத்துழைப்பு அந்த அளவுக்கு இல்லை என்பதே நிதர்சனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com