புதுச்சேரியில் (15-18 வயது) மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுவை மாநிலத்தில் 15-18 வயதுள்ள பள்ளி மாணவர்களுக்கு, கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கரோனோ தடுப்பூசி போடும் முகாமினை (கோவாக்சின் தடுப்பூசி) புதுச்சேரி கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளியில் முதல்வர் என். ரங்கசாமி துவக்கி வைத்தார்.
இதையும் படிக்க- கனமழையால் பொங்கல் பானைகள் தயாரிப்புப் பணி பாதிப்பு
அந்தப் பள்ளியில் தகுதியுள்ள 55 மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தில் 15 வயது முதல் 18 வயது உடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக 83 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் புதுச்சேரி சுகாதாரத்துறை கையிருப்பில் உள்ளது.
தொடர்ந்து இன்று முதல் பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். புதுவை மாநிலத்தில் ஏற்கனவே 13 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.