ராகுலின் பிரசாரத்தால் காங்கிரஸுக்கு ஆதரவு குறைகிறது
ராகுல் காந்தியின் பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு குறைந்து வருகிறது என்று மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு குறைந்து வருகிறது என்று மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
விஜயபுராவில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். அவரின் பிரசாரத்தால் காங்கிரஸுக்கு மக்களிடம் ஆதரவு குறைந்து வருகிறது.
கோலார், சிக்பள்ளாபூரில் ராகுல் காந்தி சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, மக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததே அதற்கு சான்றாகும்.
காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கரை ஆண்டுகள் வரை எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யாமல், தேர்தல் நெருங்கும் நேரத்தில் வளர்ச்சிப் பணிகள் அவசரகதியில் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரூ. 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.
வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் நிதி ஒதுக்கி, அதனை சம்பந்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தாமல், தேர்தல் பணிக்கு காங்கிரஸ் அரசு பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் அரசு பிரசாரத்துக்காக பல கோடி ரூபாய் மதிப்பில் நிதியை பயன்படுத்தி வருகிறது. இதற்கு முன்பு இருந்த எந்த அரசும் இது போன்று அதிக அளவில் நிதியை பிரசாரத்துக்குப் பயன்படுத்தியதில்லை.
ஜாதி, மதங்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயத்தை முதல்வர் சித்தராமையா தேடி வருகிறார். இதற்கு மடாதிபதிகளும் பலியாகி வருவது வேதனையளிக்கிறது. விரைவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ், பாஜகவுக்கு ஆதரவு தருவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். மஜதவுக்கு ஆதரவு பெருகியுள்ளதால், 1 13 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி என்றார் குமாரசாமி.