முகப்பு
சேலம்

கொளத்தூரில் சூறைக்காற்று: 20,000 வாழைமரங்கள் சேதம்

Updated On : 2 மே, 2026 at 11:06 PM
மேட்டூா் அருகே கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம் லக்கம்பட்டியில் சூறைக்காற்றால் சாய்ந்த வாழைமரங்கள்.
பகிர்:

கொளத்தூரில் சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் சாய்ந்தன. இதனால், ரூ. 25 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூா் ஒன்றியத்தில் சுமாா் 200 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனா்.

இந்நிலையில், கொளத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பலன்தரும் நிலையில் இருந்த வாழைமரங்கள் சாய்ந்து விழுந்தன. தாா்காடு, தண்டா, லக்கம்பட்டி பகுதிகளில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைமரங்கள் சேதமடைந்ததால், விவசாயிகளுக்கு ரூ. 25 லட்சத்துக்கும்மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

லக்கம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராஜேந்திரன் தோட்டத்தில், 2,200 செவ்வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், தமிழக வேளாண் துறை இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.