கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்...
சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளை மறுநாள்(ஏப். 23 ஆம் தேதி) சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் சாலைவலம் மேற்கொண்டு திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
Advertisement
இதன்பின்னர் தனது தொகுதியான கொளத்தூரில் சாலைவலம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியபோது, "ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் நான் முதலமைச்சராக இருந்தாலும் சென்னை நான் பாசமாக வளர்த்த குழந்தை. அதிலும் கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை.
சென்னை மாநகரின் தந்தையாய், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் நான். எங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் 10 நாள்களுக்கு ஒரு முறை கொளத்தூர் வருவேன்.
கொளத்தூர் தொகுதியில் செய்து கொடுத்த திட்டங்கள் எல்லாம் எனக்காக இங்கு ஓட்டு கேட்கின்றன. நான் ஓட்டு கேட்டு வர வேண்டும் என எதிர்பார்க்க மாட்டீர்கள், கொளத்தூர் மக்கள் என் மீது காட்டும் அன்பு அப்படி.
ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை நான் அறிமுகம் செய்து வைப்பேன். கொளத்தூரில் நானே என்னை அறிமுகம் செய்து வைத்துக் கொள்கிறேன்.
கொளத்தூரில் உங்களுக்காக உழைத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெறச் செய்வீர்களா?
திமுக அரசின் திட்டங்களைச் சொன்னால் ஒருநாள் போதாது, மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம்" என்றார்.