சாமுண்டீஸ்வரி தொகுதி மக்கள் என்னை கைவிட மாட்டார்கள்: முதல்வர் சித்தராமையா நம்பிக்கை
சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடும் சாமுண்டீஸ்வரி தொகுதி மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடும் சாமுண்டீஸ்வரி தொகுதி மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சென்னப்பட்டணா தொகுதியில் தன்னுடன் போட்டியிடுமாறு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி எனக்கு சவால் விட்டுள்ளார். 2013-ஆம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னப்பட்டணா தொகுதியில் குமாரசாமியின் மனைவி அனிதா தோற்கவில்லையா? கடந்த மக்களவைத் தேர்தலின் போது சிக்பளாப்பூர் தொகுதியில் குமாரசாமி தோற்கவில்லையா? அப்படியானால் சென்னப்பட்டணாவில் தனது மனைவி அனிதா தோற்றபோது, அத் தொகுதியில் அவருக்கு செல்வாக்கு இருக்கவில்லையா? குமாரசாமி அளவுக்கு தரக்குறைவாக என்னால் பேச முடியாது.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் நான்கு முறை வென்று, இரண்டுமுறை தோற்றுள்ளேன். இம்முறை அத் தொகுதி மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். தொகுதியில் பிரசாரம் செய்தபோது கிடைத்த வரவேற்பை கண்டு அச்சம் அடைந்துள்ள குமாரசாமி, என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார்.
இதன்மூலம் மக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறார். வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் நல்ல
முடிவை எடுப்பார்கள். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது அரசியலில் இயல்பானது. அவர்களை சமாதானப்படுத்த முயற்சிப்போம் என்றார்.
பிரசாரத்தில் சித்தராமையா உருக்கம்
தேர்தல் பிரசாரத்தின் போது மறைந்த தனது மகன் ராகேஷை நினைத்து முதல்வர் சித்தராமையா உணர்ச்சிவயப்பட்டார்.
மைசூரு மாவட்டத்தின் வருணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடவிருக்கும் தனது இளைய மகன் டாக்டர் யதீந்திராவுக்கு ஆதரவாக அத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை முதல்வர் சித்தராமையா பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ஓராண்டுக்கு முன்பு மறைந்த தனது மூத்த மகன் ராகேஷை நினைத்து சித்தராமையா உணர்ச்சிவயப்பட்டார். சாமுண்டீஸ்வரி, வருணா தொகுதிகளில் தான் (சித்தராமையா) போட்டியிட்ட போது தேர்தல் பணிகளை முன்னின்று கண்காணித்து வந்த தனது மகன் ராகேஷ், இம்முறை நடைபெறும் தேர்தலின் போது தன்னுடன் இல்லையே என்று உருக்கமாக தெரிவித்தார்.
எனது மகன் ராகேஷை என்னால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது என்று கூறிய சித்தராமையா, ராகேஷ் மறைந்ததால் தான் தனது இளையமகன் யதீந்திராவை அரசியலுக்கு இறக்கியதாகக் குறிப்பிட்டார். இரண்டு முறை என்னை தேர்ந்தெடுத்தது போல, இம்முறை என் மகன் யதீந்திராவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தொகுதி மக்களைக் கேட்டுக் கொண்டார்.