முதல் நூலை வெளியிட தாழ்த்தப்பட்டோருக்கு நிதியுதவி
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் எழுதியுள்ள முதல்நூலை வெளியிடுவதற்கு நிதியுதவி வழங்குவதற்கான விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் எழுதியுள்ள முதல்நூலை வெளியிடுவதற்கு நிதியுதவி வழங்குவதற்கான விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கன்னட புத்தக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் எழுதியுள்ள முதல்நூலை வெளியிடுவதற்கு கன்னட புத்தக ஆணையம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது.
2018-19-ஆம் நிதியாண்டில் முதல்நூலை வெளியிடுவதற்கு நிதியுதவி பெற விரும்பும் எழுத்தாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுக்குள்பட்டிருக்க வேண்டும். வயதை உறுதி செய்ய எஸ்எஸ்எல்சி சான்றிதழ் அல்லது அதிகாரப்பூர்வ பிறப்புச் சான்றிதழ்களை இணைத்திருக்க வேண்டும். இதேபோல, நிதியுதவி கோரப்படும் நூல் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்பதற்கு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.
நூலின் மாதிரி பிரதியை 1/8 டம்மி காகிதத்தில் 200 பக்கங்களுக்கு மிகாமல் அனுப்பிவைக்க வேண்டும். மொழிபெயர்ப்பு, பாடநூல்கள் நிதியுதவி பெற தகுதியற்றவையாகும்.
கன்னட இலக்கிய வடிவங்களான கதை, புதினம், கவிதை, நாடகம், விமர்சனம், கலை கட்டுரைகள், குழந்தை இலக்கியம், சுயசரிதை, சுற்றுலா கட்டுரை, கட்டுரை தொகுப்பு ஆகியவற்றுக்கு நிதிஉதவி வழங்கப்படும்.
நூலில் மதம், ஜாதி, கடவுள், தனிநபர், சமுதாயம், மொழி, பழக்கவழக்கங்களை விமர்சித்திருக்கக் கூடாது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும்வகையில் இருக்கக் கூடாது.
கூடுதல் விவரங்களுக்கு www.kannadapustakapradhikara.com என்ற இணையதளத்தில் அறியலாம்.
பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை ஜூலை 21-ஆம் தேதிக்குள் "கன்னடபுத்தக ஆணையம், கன்னடமாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு' என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 080-22484516, 22177704 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.