முகப்பு
பெங்களூரு

பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்

சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

Updated On : 15 மே, 2018 at 2:51 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிஅமைக்கும் என்பதில் ஐயமில்லை. 224 தொகுதிகளில் 100 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறும். பாஜகவுக்கு 75 இடங்களும், மஜதவுக்கு 40 இடங்களும் கிடைக்கும். 20 தொகுதிகளில் மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் 500 முதல் 2,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவும், தோல்வி அடையும் வாய்ப்புள்ளது.
இந்த 20 தொகுதிகளில் அதிக இடங்களை காங்கிரஸ் வெல்லும். இதன் காரணமாக, காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறைந்தபட்சம் 112 இடங்களை கைப்பற்றுவோம். அதேபோல, ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெறும்.
மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் கேள்விக்கே இடமில்லை. சித்தராமையா தலைமையில் தேர்தலை சந்தித்துள்ளோம். எனவே, சித்தராமையா தான் எங்கள் முதல்வர் வேட்பாளர். அடுத்த முதல்வராகவும் சித்தராமையா தொடர்வார். இது கட்சியில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதுதான்.
காங்கிரஸ் வென்றால் அதற்கு காரணம் சித்தராமையா தான். மக்கள் நலத் திட்டங்கள் மட்டுமல்லாமல், திரைமறைவில் கட்சியின் வெற்றிக்கு ஏராளமானவற்றை அவர் செய்துள்ளார். மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியுள்ளார். சித்தராமையாவின் மக்கள் நலத் திட்டங்களுக்கு கர்நாடகத்தில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் பாராட்டு கிடைத்துள்ளது. ஒருவேளை தோற்றால் அதற்கு யாரையும் காரணம் சொல்ல முடியாது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.