மக்களவைத் தேர்தல்: மே 23-இல் பாஜக முன்னணித் தலைவர்கள் கூட்டம்
மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக பெங்களூரில் மே 23-ஆம் தேதி பாஜகவின் முன்னணித் தலைவர்கள் கூட்டத்துக்குஅக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார்
மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக பெங்களூரில் மே 23-ஆம் தேதி பாஜகவின் முன்னணித் தலைவர்கள் கூட்டத்துக்குஅக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார்.
கர்நாடகத்தில் உருவான குழப்பமான அரசியல் சூழ்நிலையால், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, அடுத்தாண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார். கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவுக்கு வெற்றியைத் தேடிதர பாடுபடப்போவதாக அறிவித்துள்ள எடியூரப்பா, அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட தொடங்கியிருக்கிறார். சில வாரங்களில் மாநிலம் முழுவதும் பயணம் செய்து மக்களைச் சந்தித்து மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கும் எடியூரப்பா, அதுகுறித்து விவாதிப்பதற்காக கட்சியின் முன்னணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மே 23-ஆம் தேதி பாஜக முன்னணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த கூட்டத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இதனிடையே, புது தில்லி சென்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்து கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகளை விவரிக்கவும் எடியூரப்பா திட்டமிட்டிருக்கிறார்.