உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம்
பணியின்போது உயிர்தியாகம் செய்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதையுடன் காவலர்கள் வீர வணக்கம் செலுத்தினர்.
பணியின்போது உயிர்தியாகம் செய்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதையுடன் காவலர்கள் வீர வணக்கம் செலுத்தினர்.
நாடு முழுவதும் பணியின்போது உயிர்தியாகம் செய்த காவலர்களின் கடமை உணர்வை போற்றும்விதமாக, காவல் துறை சார்பில் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21-இல் கடைபிடிக்கப்பட்டு, உயிரிழந்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படுகிறது.
இதன்படி, கோலார்தங்கவயல் மாவட்ட காவல்துறை சார்பில் கோலார்தங்கவயல், ராபர்ட்சன்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் பேசியது:-
24 மணி நேரமும் பணிபுரியும் காவலர்கள் கடமையின்போது உயிர் தியாகம் செய்வது கொடுமையானது. அது போன்ற காவலர்களின் குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இழப்பீடுகள் போன்ற நல உதவிகள் உடனடியாக கிடைக்க வகை செய்ய வேண்டும் என்றார்.
இதன்பின்னர், மாநிலம் வாரியாக பணியில் உயிரிழந்த 414 காவலர்களின் பெயர்களை காவல் துறை கண்காணிப்பாளர் லோகேஷ் குமார் வாசித்த பிறகு ஆயுத படை காவலர்கள் அணிவகுப்பு மரியாதையோடு துப்பாக்கி குண்டுகள் முழங்கி வீர வணக்கம் செலுத்தினர். இதுதவிர, அங்குள்ள காவலர் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.