உரையாடல் ஒலிப்பதிவு விவகாரம்: விரைவில் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைப்பு: கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர்
உரையாடல் ஒலிப்பதிவு விவகாரம் வெகுவிரைவில் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
உரையாடல் ஒலிப்பதிவு விவகாரம் வெகுவிரைவில் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
அண்மையில் மஜத எம்.எல்.ஏ நாகன கெளடாவின் மகன் சரண கெளடாவுடன் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, எம்.எல்.ஏ சிவன கெளடா நாயக் உள்ளிட்டோர் குதிரை பேரம் பேசியதாக முதல்வர் குமாரசாமி, உரையாடல் ஒலிப்பதிவை வெளியிட்டார். இதில் சட்டப்பேரவைத் தலைவரையும் சம்பந்தப்படுத்தியதால், இது தொடர்பாக விசாரணை செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கு பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து ஞாயிற்றுக்கிழமை ஜி.பரமேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறியது:
உரையாடல் ஒலிப்பதிவு விவகாரம் தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க முதல்வர் குமாரசாமி பின்வாங்குவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. விரைவில் உடையாடல் ஒலிப்பதிவு விவகாரம் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும். இதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார். மேலும், மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு செய்து கொள்வது தொடர்பாக மஜத தேசியத் தலைவர் தேவெ கெளடாவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. அவருடன் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மக்களவைத் தேர்தலை மஜதவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி சந்திக்க உள்ளது.
விரைவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், மஜத கட்சியின் மூத்த தலைவர்களுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார். பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால், கட்சியின் மேலிடத் தலைவர்களின் வழிக்காட்டுதலின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.