வழக்கு ஒன்றில் மேல் முறையீடு செய்வதற்கு லஞ்சம் பெற்றதாக உதவி அரசு வழக்குரைஞர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், திப்டூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உதவி அரசு வழக்குரைஞராகப் பணியாற்றி வருபவர் பூர்ணிமா. இவர் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை மேல்முறையீடு செய்வதற்காக ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அவர் ஏற்கெனவே ரூ. 20 ஆயிரம் கொடுத்திருந்த நிலையில், திங்கள்கிழமை மீண்டும் ரூ. 20 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதை பூர்ணிமா சார்பில் நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றும் சரண்குமார் பெற்றுக் கொண்டுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு படையினர் அவரையும், அவர் அளித்த தகவலின் பேரில் உதவி அரசு வழக்குரைஞர் பூர்ணிமாவையும் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பூர்ணிமா, சரண்குமாரிடம் தும்கூரு லஞ்ச ஒழிப்பு படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.