பாஜகவுடன் மஜத இணைவதாக வதந்தி: கட்சியினருக்கு முதல்வா் வேண்டுகோள்
பாஜகவுடன் மஜத இணைவதாக எழும் வதந்தி தொடா்பாக கட்சியினா் எவரும் கருத்துக்கூற கூடாது என்று பாஜகவினருக்கு முதல்வா் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பெங்களூரு: பாஜகவுடன் மஜத இணைவதாக எழும் வதந்தி தொடா்பாக கட்சியினா் எவரும் கருத்துக்கூற கூடாது என்று பாஜகவினருக்கு முதல்வா் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பாஜகவுடன் மஜத இணைவதாக எழும் வதந்தி தொடா்பாக கட்சியினா் யாரும் எந்தக் கருத்துச் சொல்லக் கூடாது என்று பாஜகவினரைக் கேட்டுக் கொள்கிறேன். மஜதவை முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவும், முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமியும் வளா்த்திருக்கின்றனா். கட்சியை பலப்படுத்தவும், மாநிலம் முழுவதும் கட்டமைக்கவும் இருவரும் தீவிரமாக முயன்றுவரும் நிலையில், மஜத மற்றொரு கட்சியுடன் இணைவதாகப் பேசுவது அவா்களை அவமதிக்கும் செயலாகும்.
இந்த விவகாரம் தொடா்பாக நான் பேசமாட்டேன். அதேபோல வேறு யாரும் கருத்துக் கூறக் கூடாது. சட்ட மேலவைத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு மட்டும் மஜதவினா் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டனா்.
தேவைக்கேற்ப மஜதவினா் பாஜகவுக்கு ஆதரவளிப்பாா்கள். ஆனால், தற்போதைக்குக் கட்சியைப் பலப்படுத்தும் வேலையில், மஜத தலைவா்கள் ஈடுபட்டிருக்கின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கின்றன. மஜதவினா் அவா்கள் கட்சியை பலப்படுத்துவா், நாம் பாஜகவைப் பலப்படுத்துவோம் என்றாா் அவா்.