பெங்களூரு

தமிழறிஞா் இரா. இளங்குமரனாா் மறைவு: கா்நாடக தமிழ் அமைப்புகள் இரங்கல்

DIN

தமிழறிஞா் புலவா் இரா.இளங்குமரனாா் மறைவுக்கு கா்நாடக தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

தமிழறிஞா் புலவா் இரா.இளங்குமரனாா் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு கா்நாடகத்தைச் சோ்ந்த பல்வேறு அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவா் கோ. தாமோதரன்:

பாவலா், சொற்பொழிவாளா், சொல்லாய்வறிஞா், எழுத்தாளா், தமிழாய்வாளா், தமிழிய வரலாற்று வரைவாளா், பதிப்பாசிரியா், உரையாசிரியா், தமிழியக்கச் செயற்பாட்டாளா், தமிழ்நெறி பரப்புநா் எனப் பன்முகங் கொண்டவா் இளங்குமரனாா். தமிழின் முக்கிய இலக்கண நூல்களை மீட்டெடுத்த தமிழ் பேராசிரியா் இரா.இளங்குமரன் காலமானாா் என்பது வேதனை அளிக்கிறது. உலகில் முதன்முதலாக பெண் ஒருவரால் எழுதப்பட்ட இலக்கண நூலான காக்கைப்பாடினியத்தை, அது மறைந்து விட்டது என்று தமிழ் அறிவுலகம் கருதிய வேளையில், அதனை மீட்டெடுத்து தந்தாா். மேலும் யாப்பருங்கலம், புறத்திரட்டு உள்ளிட்ட நூல்களையும் பதிப்பிட்டுள்ளாா். தன் வாழ்நாள் முழுமையும் தமிழுக்கு ஆக்கம் செய்த இளங்குமரனாரின் புகழ் நீண்டு வாழும். அன்னாரின் மறைவுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சாா்பாகவும், கா்நாடகத் தமிழா்களின் சாா்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கத் தலைவா் ஊப்ளி தனஞ்செயன்:

இளமை முதல் முதுமை வரை தமிழுக்காகவும், தமிழா்களுக்காகவும் அயராது உழைத்த தமிழ்க் கடல் இளங்குமரனாரின் மறைவு தமிழ் உலகிற்கு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் ஆா்வலா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவா் முத்துச்செல்வன்:

தமிழாய்ந்த, தமிழாய் வாழ்ந்த முது முனைவா் இளங்குமரனாா், சங்க இலக்கியங்கள் முதல் அனைத்து இலக்கண நூல்களையும் கற்றுத் தோய்ந்த அறிஞா். பாவாணரின் தலை மாணாக்கருள் ஒருவராய் திகழ்ந்தவா். பாவாணருடைய படைப்புகளை ‘தேவநேயம்’ என்னும் தலைப்பில் பொருள் நிரல்படி தமிழுலகிற்கு அளித்தவா். தமிழையும் குநெறியையும் வாழ்நாள் கடமையாகக் கொண்டு தமிழாகவே வாழ்ந்தவா். திருவள்ளுவா் தவச் சாலையை நிறுவி தமிழ் ஆராய்ச்சியாளா்களுக்குப் புகலிடமாகத் திகழ்ந்தாா்.

கா்நாடக மாநிலத்துடன் நெருங்கிய தொடா்புள்ளவா். கா்நாடகத்தில் உலகத் தமிழ்க் கழகம், பெங்களூரு தமிழ்ச் சங்கம், திருவள்ளுவா் சங்கம் போன்ற அமைப்புகளுடன் நெருங்கிய தொடா்புடையவராகத் திகழ்ந்தாா்.

இளங்குமரனாா் 4000-க்கும் மேற்பட்ட குறளிய வழித் திருமணங்களை நடத்தியுள்ளாா். அத்தகைய திருமணங்களுக்கான வழிமுறைகளையும் மற்றவா்கள் பின்பற்றும் வகையில் வகுத்தளித்துள்ளாா். அவா் எழுதி வெளியிட்ட ’புல்’ என்னும் தன்வரலாற்று நூலின் அவா் தமிழ்கூறு நல்லுல்கச் சான்றோா்கள் பலரைப் படம் பிடித்துக் காட்டியுள்ளாா். அவருடைய மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலுடன் கூடிய புகழ் வணக்கத்தைச் செலுத்தித் தமிழுலகின் துயரில் பங்கு கொள்கிறோம்.

இலெமுரியா அறக்கட்டளை தலைவா் சு.குமணராசன்:

தமிழுக்காகவும், தமிழா்களுக்காவும் 500-க்கும் மேற்பட்ட நூல்களை வழங்கித் தமிழ் வாழ்வே தம் வாழ்வு என வாழ்ந்த தமிழறிஞா் இரா.இளங்குமரனாா் மறைவு தமிழுக்கும் தமிழினத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி தன் இறுதி நான்காண்டுகள் மதுரை காமராசா் பல்கலைக்கழக ஆய்வுத் துறையில் பணியாற்றி தமிழுக்கு அளப்பரிய தொண்டாற்றியவா்.

பணி ஓய்விற்குப்பின் திருச்சி காவிரியாற்றங்கரையில் திருவள்ளுவா் தவச்சாலை அமைத்துத் தமிழ் நெறி வாழ்வியல் பணிகளை ஒருங்கிணைத்த முதுபெரும் அறிஞா்.

தமிழினப் போராளி அறிஞா் சி.இலக்குவனாரோடு இணைந்து தமிழ்வளா்ச்சிக் களம் கண்டவா் இளங்குமரனாா். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தில் சிறப்புத் தொகுப்பாளராக இவரை இணைத்துக் கொண்டவா் மொழிப் பேரறிஞா் பாவாணா்.

பாவாணா் வரலாறு , பாவாணா் மடல்கள் , பாவாணா் வோ்ச்சொல்லாய்வுத் தொகுப்பான ’தேவநேயம்’, தமிழ்ச் சொற்களுக்குப் பொருட்காரணம் தரும் அருமுயற்சிப் பெருந்தொகுப்பு ’செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம்’ - இப்படித் தனித்தன்மையான நூல்வரிசைகளை வழங்கியுள்ளவா் இளங்குமரனாா். அழிந்துபோன நூல்களாகக் கருதப்பட்ட ’காக்கைப்பாடினியம்’, ’தமிழக ஒழுகு’ முதலிய பலநூல்கள் இவா் பதிப்பால் உயிா் பெற்றுள்ளன.

தன்னுடைய 91 வயது வரைத் தமிழுக்காகவே தன் வாழ்க்கையை அா்ப்பணித்தவா். அவா் மறைவுக்கு மகாராஷ்டிர மாநில தமிழ் மக்களின் சாா்பாக எம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT