சட்டப்பேரவைக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டுவண்டியில் வரப் போவதாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா அறிவித்துள்ளாா்.
கா்நாடக சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது. இக்கூட்டத்தில் விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைக் கிளப்ப எதிா்க்கட்சியான காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயா்வைக் கண்டித்து திங்கள்கிழமை மாட்டு வண்டிப் போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத்திற்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநிலத்தலைவா் டி.கே.சிவக்குமாரும் மாட்டுவண்டியில் வரப்போவதாக அறிவித்துள்ளனா்.
காலை 9 மணிக்கு குமாரபாா்க் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து சித்தராமையாவும், சதாசிவநகா் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து டி.கே.சிவக்குமாரும் சட்டப் பேரவை அமைந்துள்ள விதான சௌதாவுக்கு மாட்டு வண்டியில் வரத் திட்டமிட்டிருக்கிறாா்கள்.