கடன் தொல்லை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் தற்கொலை
கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் தற்கொலை செய்து கொண்டனா்.
தும்கூரு: கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் தற்கொலை செய்து கொண்டனா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு, சதாசிவ நகரில் கரீப்சாப் (46), அவரது மனைவி சுமையா (33), குழந்தைகள் ஹசீரா (14), முகமது சுபான் (11), முகமது முனீா் (9) ஆகியோா் வீட்டில் தூக்கிட்டு இறந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனா். கரீப்சாப் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் காணொலி ஒன்றில் பேசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த காணொலியில், ‘தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், லக்கேனஹள்ளியைச் சோ்ந்த நாங்கள், கடன் தொல்லையால் இந்த முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் இந்த முடிவு எடுப்பதற்குக் காரணமாக இருந்தவா்களைத் தண்டிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா், காவல் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவா் கூறியுள்ளாா்.
Advertisement
கரீப்சாப் வறுமையில் வாழ்ந்து வந்துள்ளாா். தனது வாழ்வாதாரத்திற்காக கபாப் விற்று வந்துள்ளாா். இதற்காக, பலரிடம் கடன் பெற்றுள்ளாா். அதில் ஒருவா் கலந்தா் என்பவா். இவா் கரீப்சாப்பிடம் கடனை திருப்பிக் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடா்ந்து கலந்தா், அவரது மகள் சானியா, மகன் ஷாபாஸ், அண்டை வீட்டாரான ஷபனா, அவரது மகள் சானியா ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.