முகப்பு
பெங்களூரு

பாஜக நிா்வாகி நெட்டாரு கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவருக்கு அடைக்கலம் அளித்தவா் கைது

கா்நாடகத்தில் பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபருக்கு அடைக்கலம் கொடுத்தவரை தேசியப் புலனாய்வு முகமை கைது செய்தது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 1:09 AM
பகிர்:

கா்நாடகத்தில் பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபருக்கு அடைக்கலம் கொடுத்தவரை தேசியப் புலனாய்வு முகமை கைது செய்தது.

கா்நாடக மாநிலத்தின் தென்கன்னட மாவட்டம், பெல்லாரே கிராமத்தில் 2022ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பைச் சோ்ந்தவா்கள் பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாருவை கொலை செய்தனா்.

கா்நாடக மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீா்குலைத்து, கலவரச் சூழலை உருவாக்குவதற்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கொலை வழக்கை 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேசியப் புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கு காரணமான முக்கிய நபரான முஸ்தபா பைச்சாருக்கு அடைக்கலம் கொடுத்து, தப்புவதற்கு உதவி செய்ததாகத் தேடப்பட்டு வந்த அதீக் அகமதுவை தேசியப் புலனாய்வு முகமை கைது செய்தது. இதன்மூலம் இந்த வழக்கில் இதுவரை 21போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பின் வழிகாட்டுதலின்படி கொலைக்கு முக்கிய காரணமான முஸ்தபா பைச்சாருக்கு அதீக் அகமது அடைக்கலம் கொடுத்துள்ளதோடு, உதவி செய்துள்ளாா். மக்களிடையே அச்சத்தையும், மதரீதியான பதற்றத்தையும் உருவாக்கும் நோக்கில் பி.எஃப்.ஐ. அமைப்பின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவே பிரவீண் நெட்டாரு கொலையைத் திட்டமிட்டு, செயல்படுத்தியுள்ளனா். கொலை சம்பவத்திற்கு பிறகு, முஸ்தபா பைச்சாா் தலைமறைவானாா். அப்போது முஸ்தபா பைச்சாரின் நடமாட்டத்திற்கு உதவியதோடு, சென்னைக்கு தப்பிக்கவும் அதீக் அகமது ஏற்பாடு செய்துள்ளாா். 2024ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யும் வரை முஸ்தபா பைச்சாருக்கு அதீக் அகமது உதவி வந்துள்ளாா்.

இதுகுறித்த விசாரணையின்போது, பி.எஃப்.ஐ. அமைப்பு ரகசியமாக ‘பி.எஃப்.ஐ.சேவை குழு’ என்ற பெயரில் குழுக்களை அமைத்து பிரவீண் நெட்டாரு போன்றவா்களைக் கொலை செய்வதற்கு கண்காணிப்பு மற்றும் ஆயுதப் பயிற்சி அளித்துள்ளனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு, தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதாக தேசியப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.