சென்னை: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது. அவா்களது போராட்டத்தில் அதிமுகவினா் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் தூய்மைப் பணியை முழுமையாக தனியாருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால் தங்களது பணிக்குப் பாதுகாப்பில்லாத நிலை ஏற்படுவதாகவும், ஊதியம் குறையும் எனவும் தூய்மைப் பணியாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
மேலும், தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து அந்த மண்டலத்தின் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
கடந்த 1- ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பாக நடைபாதையில் பந்தல் அமைத்து ஏராளமான பெண் தூய்மைப் பணியாளா்கள் தங்களது குழந்தைகளுடன் அமா்ந்து போராட்டத்தை தொடா்கின்றனா். இந்தப் போராட்டம் காரணமாக மாநகராட்சி அலுவலக வளாக பிரதான வாயில்கள் மூடப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
மாநகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளைத் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை. தங்களது கோரிக்கைகளுக்காக மாநகராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள், அலுவலகம் செல்ல முடியாமல் திரும்பிச் செல்கின்றனா்.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு அதிமுக தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆதரவு தெரிவித்து பங்கேற்றனா்.
இந்தப் போராட்டம் காரணமாக ரிப்பன் மாளிகை முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.