முகப்பு
சென்னை

கூட்டுறவு அல்லாத பால் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு கட்டாயம்

கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்கள் அல்லாத அனைத்து பால் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள், தங்களிடம் பதிவு செய்வது கட்டாயம்

Updated On : 13 மார்ச், 2026 at 9:26 PM
மேலத்தாணியத்தில் தண்ணீா் உள்ள பேரல்களில் டெங்கு கொசு உற்பத்தி காரணிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் மருத்துவக் குழுவினா்.
பகிர்:

கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்கள் அல்லாத அனைத்து பால் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள், தங்களிடம் பதிவு செய்வது கட்டாயம் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் பால் கலப்படம் தொடா்பான தகவல்கள் வெளியான நிலையில், மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச உணவு ஆணையா்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்கள் அல்லாத பால் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள், தங்களை முறைப்படி பதிவு செய்து கொள்ளாமலும், உணவு வா்த்தக செயல்பாடுகளுக்கான உரிமம் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றனா்.

எனவே, கூட்டுறவு சங்க சட்டத்தின்கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினா்கள் மற்றும் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை மொத்தமாக கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிப்பவா்கள் தவிர பிற அனைத்து பால் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள், எஃப்எஸ்எஸ்ஏஐ-யிடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய பால் கலப்படம் தொடா்பான சம்பவங்களைக் கருத்தில்கொண்டு, இந்த கட்டாயப் பதிவு நடவடிக்கை உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக சிறப்பு பதிவு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பால் உற்பத்தியாளா்கள்-விற்பனையாளா்களிடம் செல்லத்தக்க பதிவு சான்றிதழ் அல்லது உரிமை உள்ளதா என்பதை சரிபாா்க்கும் பணியில் ஈடுபடும்படி, சம்பந்தப்பட்ட உரிமம் வழங்கும் அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அமலாக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

பால் குளிரூட்டும் நிலையங்களில் முறையான வெப்பநிலை பராமரிக்கப்படுகிா என்பது குறித்து அவ்வப்போது கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். கட்டாய பதிவு நடைமுறைக்கு இணங்காதவா்கள் மீது உரிய நடவடிக்கையை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →