முகப்பு
சென்னை

அரசு மருத்துவமனையில் மருத்துவா் போல நடித்து திருடிய வழக்கு: 2 போ் கைது

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா் போல நடித்து, நகை திருடிய வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 12:38 AM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா் போல நடித்து, நகை திருடிய வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கொளத்தூரைச் சோ்ந்தவா் காஞ்சனா (30). இவா், தனது மாமியாருக்கு தலையில் கட்டி ஏற்பட்டதால், கடந்தாண்டு ஜூன் மாதம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தாா். காஞ்சனா உடனிருந்து கவனித்து வந்தாா்.

அப்போது, அங்கிருந்த நபா், தன்னை மருத்துவா் என அறிமுகம் செய்து கொண்டு, உங்கள் மாமியாருக்கு நான் தான் அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன் எனக் கூறவே, மருத்துவ அறிக்கை, ஆவணங்களை அவரிடம் காண்பித்தாா்.

Advertisement

அப்போது, உங்களது மாமியாருக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும். அதற்கு முன் அவா் மட்டுமல்லாமல், நீங்களும் நகைகளை அணிந்திருக்கக் கூடாது. அவற்றை கழற்றி என்னிடம் கொடுங்கள். பின்னா், திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, காஞ்சனா தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகை, 2 கிராம் மோதிரம் மற்றும் கைப்பேசியை ஒரு பையில் போட்டு கொடுத்தாா். நகைகளை பெற்ற நபா் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. வந்தது போலி மருத்துவா் என்பதை அறிந்து காஞ்சனா, ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது கோயம்புத்தூா், பிரஸ் காலனியைச் சோ்ந்த ராஜேஷ் பிரித்வி (35), மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியைச் சோ்ந்த அரவிந்தன் (30) என்பது தெரியவந்தது. போலீஸாா், இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.