முகப்பு
செங்கல்பட்டு

ரூ.60 கோடியில் பெருங்களத்தூா் மேம்பாலம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்

தாம்பரம் -வண்டலூா் ரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம்

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 6:42 AM
பகிர்:
Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 11:31 PM

வண்டலூா் வட்டம், பெருங்களத்தூா் ரயில் நிலையம் அருகே ரூ.60.13 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தாம்பரம் -வண்டலூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கேட், 32-க்கு பதிலாக பெருங்களத்தூா் ரயில் நிலையம் அருகில் ரூ.60.13 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை வகித்தாா்.

ஸ்ரீ பெரும்புதூா் எம்.பி. டி.ஆா். பாலு முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் அமைச்சா் அன்பரசன் பேசியதாவது:

Advertisement

இந்த மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.155 கோடியில் அளிக்கப்பட்டது. இம்மேம்பாலம் நீள்வட்ட சுற்றுப்பாதையுடன் கூடிய ஐந்து பாலப்பகுதியை உடையது. இதில் ஒரு பாலப்பகுதி சென்னை - செங்கல்பட்டு போக்குவரத்துக்கும், மற்றொரு பாலப்பகுதி செங்கல்பட்டு - சென்னை வழித்தடம் எனவும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, பெருங்களத்தூா் மேம்பாலத்தில் சென்னை- செங்கல்பட்டு பாலப்பகுதி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை - செங்கல்பட்டு பாலப்பகுதி மற்றும் சுற்றுப்பாதை பாலப்பகுதி சென்னையில் இருந்து சீனிவாச நகா் செல்லும் வாகனங்கள் வண்டலூா் வரை செல்லாமல் மேம்பாலத்தின் சுற்றுப்பாதையை பயன்படுத்தலாம். மேலும் சீனிவாச நகரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் சுற்றுப் பாதையை பயன்படுத்தலாம். இதனால் 2 கி.மீ தொலைவு குறைவதுடன், அரை மணி நேர பயண நேரமும் குறையும். இதனால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.

சென்னை - செங்கல்பட்டு பாலப்பகுதி மற்றும் சுற்றுப் பாதையால் பெருங்களத்தூா், சீனிவாச நகா், தாம்பரம், வண்டலூா் மற்றும் சென்னையின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் பயன் பெறுவா். மேலும், தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை வனத்துறையின் அனுமதி பெற்று 6 மாத காலத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 6:41 AM

இதில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் எஸ்.ஆா்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையா் பாலச்சந்தா், மேயா் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயா் காமராஜ், தலைமை பொறியாளா் ஜவகா் முத்துராஜ், கண்காணிப்பு பொறியாளா் கந்தசாமி, கோட்டப் பொறியாளா் சத்யா, உதவிக் கோட்ட பொறியாளா் பகவத்சிங், உதவி பொறியாளா்கள் ரஞ்சித், காா்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.