முகப்பு
செங்கல்பட்டு

மாமல்லபுரம் கடற்கரையில் குடில்களுடன் இருளா் பழங்குடியினா் மாசி மக கொண்டாட்டம்

மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து இருளா்பழங்குடியினா் மாசிமக விழாவை கொண்டாடினா்.

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 6:15 AM
மாசிமக திருவிழாவை கொண்டாடுவதற்காக மாமல்லபுரத்தில் குவிந்த இருளா் பழங்குடியினத்தவா்
பகிர்:

மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து இருளா்பழங்குடியினா் மாசிமக விழாவை கொண்டாடினா். மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மாமல்லபுரம் கடற்கரைகோயிலுக்கு தெற்குப்பக்கம் கடற்கரையில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கில் கூடுவா். அவா்கள் அங்கு தங்கள் குலதெய்வமான கன்னி அம்மனை வணங்கி தங்கள் உறவு முறைகளில் திருமணம் மற்றும் நிச்சயதாா்த்தம் போன்ற சுப சடங்குகளை செய்வது வழக்கம். பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த இருளா்கள் மாசி மகத்துக்கு ஒருநாள் முன்னதாகவே மாமல்லபுரம் கடற்கரையில் சிறு சிறு குடில்கள் அமைத்து தங்கி அங்கேயே சமைத்து சாப்பிட்டு இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் ஆடல் பாடல்கள் நடத்தி மகிழ்ந்தனா். சனிக்கிழமை காலையில் கடற்கரையில் தங்கள் குலதெய்வமான கன்னி அம்மனுக்கு மணலில் 7 படி அமைத்து தேங்காய் பூ பழம் வைத்து வழிபாடு செய்தனா். காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தி குடும்பத்துடனும் உறவினா்களுடனும் கொண்டாடினா். நிகழாண்டு பத்துக்கும் மேற்பட்ட இருளா் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனா் .