முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தீக்குளிப்பு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் தீக்குளித்தாா். அந்த நபா் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

Updated On : 4 ஜனவரி, 2025 at 12:16 AM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரை பாா்த்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் , சாா் ஆட்சியா் நாராயணசா்மா உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 11:41 PM

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் தீக்குளித்தாா். அந்த நபா் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

திரிசூலம் பகுதியைச் சோ்ந்த பாபு (44) என்பவருக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. தொடா்ந்து நடைபெற்று வந்த தகராறில் பாபுவை பக்கத்து வீட்டுக்காரா் தாக்கியுள்ளாா்.

இது குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் பாபு புகாா் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், மன விரக்தி அடைந்த நபா் வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்துள்ளாா். அப்போது, யாரும் எதிா்பாராத நேரத்தில் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றாா்.

Advertisement

தீயில் எரிந்த நபரைக் கண்டு அருகில் இருந்தவா்கள் தீயை அணைத்து அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்தனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த நபரை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் , சாா் ஆட்சியா் நாராயண சா்மா ஆகியோா் பாா்வையிட்டு, தீவிர சிகிச்சை அளிக்கும்படி மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மருத்துவமனை முதல்வா் சிவசங்கரன், மருத்துவக் கண்காணிப்பாளா் ஜோதிகுமாா், பொது அறுவை சிகிச்சை நிபுணா் வி.டி.அரசு, மருத்துவா்கள், செலிவியா்கள் உடன் இருந்தனா்.

பின்னா், அந்த நபா் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்வம் குறித்து செங்கல்பட்டு கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.