இந்திய நிவாரணப் பொருள்களை ஏற்க இலங்கை தயக்கம்? சென்னை துறைமுகத்தில் முடங்கிய 100 கன்டெய்னர்கள்
திருவொற்றியூர், ஜூலை 28: ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய பொருள்கள் கொழும்பில் தேங்கி உள்ள நிலையில் தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருள்கள் அடங்கிய 100 கன்டெய்னர்களில் ஏற்றிய நிலையில் கடந்த இரு வாரங்களாக செ
சென்னைஇந்திய நிவாரணப் பொருள்களை ஏற்க இலங்கை தயக்கம்? சென்னை துறைமுகத்தில் முடங்கிய 100 கன்டெய்னர்கள்
திருவொற்றியூர், ஜூலை 28: ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய பொருள்கள் கொழும்பில் தேங்கி உள்ள நிலையில் தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருள்கள் அடங்கிய 100 கன்டெய்னர்களில் ஏற்றிய நிலையில் கடந்த இரு வாரங்களாக செ
திருவொற்றியூர், ஜூலை 28: ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய பொருள்கள் கொழும்பில் தேங்கி உள்ள நிலையில் தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருள்கள் அடங்கிய 100 கன்டெய்னர்களில் ஏற்றிய நிலையில் கடந்த இரு வாரங்களாக சென்னை துறைமுகத்தில் உள்ள சரக்குப் பெட்டக நிலையத்தில் தேங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
இதில் உள்ள பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.12 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. நிவாரணப் பொருள்களை தமிழர்களுக்கு ஏற்க இலங்கை தயக்கம் காட்டி வருவதே இதற்கு காரணம் என தெரிகிறது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய தமிழர்கள் சார்பில் அனுப்பப்பட்ட உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் பல்வேறு சிக்கல்களை கடந்து ஜூலை 9-ல் இலங்கை சென்றடைந்தது.
ஆனால், இவற்றை விநியோகம் செய்ய ரூ.32 லட்சம் கேட்டு செஞ்சிலுவை சங்கம் நிர்பந்தம் செய்த காரணத்தால் அப்பொருகள் கொழும்பு துறைமுகத்திலேயே முடங்கி கிடக்கின்றன.
தமிழக அரசு அனுப்பிய பொருள்கள்: இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.11 கோடி மதிப்புள்ள 80 ஆயிரம் மூட்டைகள் அடங்கிய நிவாரணப் பொருள்களை அனுப்பியது.
அடுத்து, இரண்டு கட்டங்களாக சுமார் ரூ.13 கோடி மதிப்புள்ள உணவுப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள், உடைகள் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இப்பொருள்கள் அனைத்தையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான பொருள்களை தனித்தனி மூட்டைகளாக பேக்கிங் செய்து சுமார் 120 கன்டெய்னர்களில் ஏற்றி இரண்டு கட்டங்களாக ஏற்றி வைத்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட இப்பொருள்கள் அனைத்தும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் விநியோகம் செய்யப்பட்டன.
15 நாள்களாக தேங்கியுள்ள 100 கன்டெய்னர்கள்: ஏற்கனவே மூன்று முறை தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சிக்கலின்றி விநியோகிக்கப்பட்டதால் நான்காம் கட்டமாக சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதன்படி 90 ஆயிரம் சிறுவர்களுக்கான உடைகள், லுங்கி, துண்டு, சேலை, போர்வை, காலணிகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய 80 ஆயிரம் மூட்டைகள், அரிசி, பால் பவுடர், மாவு பொருகள்கள், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள் அடங்கிய 80 ஆயிரம் மூட்டைகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துப் பொருள்கள் என 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான பொருள்கள் தமிழக அரசு நிறுவனங்களான, கோ-ஆப்டெக்ஸ், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டன.
இவை அனைத்தும் 20 அடி நீளம் கொண்ட 36 கன்டெய்னர்கள் மற்றும் 40 அடி நீளம் கொண்ட 64 கன்டெய்னர்களில் ஏற்றப்பட்டு சென்னை துறைமுகத்தில் உள்ள சரக்குப் பெட்டக நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இரு வாரங்களைக் கடந்த நிலையிலும் இவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
இலங்கைக்கு நிவாரணப் பொருள்களை அனுப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறியதாவது:
நிவாரணப் பொருள்கள் அனைத்தும் மத்திய அரசின் கப்பல் கழகத்துக்கு சொந்தமான கன்டெய்னர்களில் ஏற்றப்பட்டு ஜூலை 15-ஆம் தேதி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டபடி இவை அனைத்தும் ஜூலை 17 அல்லது 18 கொழும்பு சென்ற கப்பலில் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் இருந்து இதற்கான ஒப்புதல் செவ்வாய்க்கிழமை வரை கிடைக்கவில்லை. இதனால் அனுப்ப இயலவில்லை.
அனுமதி எப்போது வரும் எனவும் தெரியவில்லை. 80 ஆயிரம் மூட்டைகளில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருள்கள் இருப்பு வைக்கப்பட்ட சூழ்நிலை காரணமாக (அதிக வெப்பம்) வீணாகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருள்கள் கொள்வாரின்றி கொழும்பு துறைமுகத்தில் முடங்கி உள்ள நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில் அனுப்பி உள்ள நிவாரணப் பொருள்கள் சென்னைத் துறைமுகத்தில் தேங்கி உள்ள சூழல் குறித்து பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு தரப்பில் கேட்டபோது காரணம் ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.