மோசமான நிலையில் மாநகராட்சி பள்ளிக் கட்டடம்
சென்னை, நவ.17: மோசமான நிலையில் உள்ள கட்டடத்தில் செயல்பட்டு வரும் கல்யாணபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருவதாக பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை, நவ.17: மோசமான நிலையில் உள்ள கட்டடத்தில் செயல்பட்டு வரும் கல்யாணபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருவதாக பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ளது இந்த மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி. கடந்த அக்டோபர் மாதம் தான் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த பள்ளிக் கட்டடம் மிகவும் பலவீனமாக உள்ளது. கட்டடத்தில் பல இடங்களில் விரிசல்கள் காணப்படுகின்றன. பள்ளியின் மேல் தளத்தில் மிகப் பெரிய விரிசல் காணப்படுகிறது.
Advertisement
மீண்டும் தொடர் மழை பெய்தால், கட்டடம் சேதமடைவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கட்டட வல்லுனர்கள்.
உடற்பயிற்சி கூடம்...இந்தப் பள்ளி வளாகத்திலேயே அப்பகுதி இளைஞர்களுக்கான உடற் பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளி மைதானத்தை, அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
மைதானம் தனியாக அமைந்திருக்கும் பட்சத்தில் மற்றவர்கள் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், பள்ளியுடன் இணைந்திருக்கும் மைதானத்தில் அனுமதிப்பதால், பள்ளி கட்டடத்துக்கும், பொருள்களுக்கும் சேதம் ஏற்படுகின்றன.
மேலும், பள்ளி வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருக்கும் உடற்பயிற்சி கூடம், வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும்.
போதிய கட்டுப்பாடுகள் இல்லாததால், சமூக விரோதிகள் சிலர், பள்ளி மேல் தளத்தில் உள்ள கதவை உடைத்துள்ளனர். பள்ளி விடுமுறை நாள்களில் அதன் வழியாக வகுப்பறைகளுக்குள் புகுந்து, கரும்பலகைகளில் ஆபாசமான படங்களை வரைந்து வைக்கின்றனர். மேலும் பள்ளி வளாகத்துக்குள்ளேயே மலம் கழிக்கின்றனர்.
எனவே, ஒப்பந்த ஊழியரை காவலுக்கு நிறுத்தாமல், மாநகராட்சி ஊழியரை காவலராக நியமித்து, கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும். விரிசல்களுடன் காணப்படும் பள்ளி கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.
மேலும், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட கல்யாணபுரம், வேளச்சேரி மற்றும் அசோக்நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உடனடியாக முதுகலை ஆசிரியர்களை நியமிக்கவேண்டும். உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆய்வகங்களை அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.