முகப்பு
சென்னை

திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு அக்டோபர் 18 முதல் "ஒதுக்கீடு' முறை ரத்து

சென்னை, அக். 13: திருப்பதி ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு, அரசு சுற்றுலா சேவை நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட "ஒதுக்கீடு' முறை இம்மாதம் 18-ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட உள்ளது

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:57 PM
பகிர்:

சென்னை, அக். 13: திருப்பதி ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு, அரசு சுற்றுலா சேவை நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட "ஒதுக்கீடு' முறை இம்மாதம் 18-ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட உள்ளது.

  இதையடுத்து திருப்பதிக்கு புனித சுற்றுலா சேவை நடத்தும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.), ஆந்திர சுற்றுலா வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், இந்திய சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அரசு சார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

  ஆந்திரம் மட்டுமன்றி சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் திருப்பதிக்கு, ஆந்திர சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் (ஏ.பி.டி.டி.சி.) தினமும் சிறப்பு சுற்றுலா சேவைகளை அதிக அளவில் இயக்குகிறது.

  முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, புனித சுற்றுலா சேவையுடன் திருப்பதி மற்றும் திருச்சானூரில் சுவாமி தரிசனத்துக்கும் ஏற்பாடுகளை ஏ.பி.டி.டி.சி. செய்து வந்தது.

  இதேபோல ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனமும் சென்னையில் இருந்து ரயில் மற்றும் டெம்போ வேன்கள் மூலம் திருப்பதிக்கு பல்வேறு சுற்றுலா சேவைகளை (பேக்கேஜ்) வழங்கி வருகிறது. பக்தர்களுக்கு தங்கும் வசதி, உணவு ஆகியவற்றுக்கு சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  இதேபோல இந்திய சுற்றுலா வளர்ச்சி நிறுவனமும், விமானப் போக்குவரத்து நிறுவனமான "இந்தியன்' உள்ளிட்ட அரசு நிறுவனங்களும் சுற்றுலா சேவைகளை திருப்பதிக்கு வார நாள்களில் இயக்கி வருகின்றன.

  பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், ஆண்டு முழுவதும் திருப்பதி சுற்றுலா பயணத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படுகின்றன.

  இதில் முன்பதிவு செய்யும் பயணிகளின் பட்டியல் உடனுக்குடன் திருப்பதி-திருமலை தேவஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

  இதன்படி, "செல்லுலார் தரிசனம்' மற்றும் "அர்ச்சனானந்தாரா' தரிசனத்துக்கு ஒவ்வொரு சுற்றுலா நிறுவனத்துக்கும் தினமும் ஒதுக்கீடு (கோட்டா) முறையில் தேவஸ்தானம் அனுமதி வழங்கியது. தரிசன டிக்கெட் எண்ணிக்கை விவரம்:

  ஏ.பி.டி.டி.சி. 900, ஐ.ஆர்.சி.டி.சி. 150, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் 100, இந்திய சுற்றுலா நிறுவனம், இந்தியன் தலா 50.

  இதில் செல்லுலார் தரிசனத்துக்கான கட்டணம் 21-ம் தேதிக்குப் பின் ரூ. 100-லிருந்து ரூ. 300 ஆக உயர்த்தப்பட உள்ளது.

  இந்நிலையில், சுற்றுலா நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த "செல்லுலார்' மற்றும் "அர்ச்சனானந்தாரா' தரிசனத்துக்காக வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை சில உள்ளூர் தனியார் நிறுவனங்கள் முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் செய்யப்பட்டது.

  இந்த ஒதுக்கீடு முறையால் அதிக அளவு வருவாய் ஈட்டப்படுகிறதே தவிர, சாதாரண பக்தர்கள் தரிசனத்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகவும் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

  பக்தர்கள் ஏமாற்றம்: இதையடுத்து, வரும் 18-ம் தேதி முதல் சுற்றுலா நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு முறை ரத்தாகிறது. இதனால் சுற்றுலா நிறுவனங்களின், சுவாமி தரிசனத்துடன் கூடிய திருப்பதி சிறப்பு சுற்றுலா சேவை திட்டங்கள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  இது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு, திருப்பதி தேவஸ்தானத்துக்கும், ஆந்திர அரசுக்கும், ஐஆர்சிடிசி உள்ளிட்ட சுற்றுலா நிறுவனங்கள் கோரி வருகின்றன.

  இந்நிலையில், இப் பிரச்னை தொடர்பாக ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாதில் விரைவில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.