நிதிப் பற்றாக்குறையால் திணறும் சட்டப் பல்கலைக்கழகம்
சென்னை, நவ. 20: போதிய நிதி இல்லாத காரணத்தால் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியாத நிலைக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர
சென்னை, நவ. 20: போதிய நிதி இல்லாத காரணத்தால் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியாத நிலைக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மற்ற பல்கலைக்கழகங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உதவி வரும் மாநில அரசு, சட்டப் பல்கலைக்கழகத்தை மட்டும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்படும் கல்விக் கட்டணம், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நிதி உள்ளிட்ட வழிகளில் வருமானம் கிடைக்கின்றது.
Advertisement
அதோடு, அந்தப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத இடங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளிப்பதன் மூலம், அவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் ஊதியம், நிதியாக மாநில அரசிடமிருந்து கிடைத்து விடுகின்றது.
இந்த கூடுதல் நிதி மூலம், மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்கலைக்கழகங்களும் உடனுக்குடன் உள்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்கிக் கொள்கின்றன. "நவீன வகுப்பறை, வீடியோ கான்பரன்சிங் வசதி என நவீன வசதிகளை பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னைப் பல்கலைக்கழகம் பெற்றுவிட்டது.
ஆனால், ஆயிரம் மாணவர்கள் படித்துவரும், சட்ட மேதை அம்பேத்கரின் பெயரைத் தாங்கி நிற்கும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவர் கூறியது:
மாணவர்களிடமிருந்து பெறப்படும் கல்விக் கட்டணம், யுஜிசி நிதி ஆகியவற்றின் பெரும் பகுதி, ஊழியர்களின் ஊதியத்துக்கு செலவிடப்படுகிறது.
எஞ்சியிருக்கும் சிறு தொகை மற்றும் அவ்வப்போது கட்டட வளர்ச்சிக்காக தமிழக அரசு அளிக்கும் நிதியில் ஒரு பகுதியைக் கொண்டு சிறு சிறு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், பல்கலைக்கழக பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருவதால், அவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்துக்கான நிதி அரசிடமிருந்து
கிடைக்காமல் உள்ளது. இந்த பெருந்தொகை கிடைத்தால், உள்கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக மேம்படுத்த முடியும்.
பெங்களூரு தேசிய சட்டப் பள்ளி உள்ளிட்ட பிற மாநில சட்டக் கல்லூரிகள் உள்கட்டமைப்பு வசதிகளில் அபார வளர்ச்சி பெற்றுள்ளன. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் பரந்த அறிவை பெற முடிகிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், அண்மையில்தான் முழுமையான இணையதள வசதியை பெற்றது. படிப்படியாக "வெர்ச்சுவல்' வகுப்பறை, டிஜிட்டல் நூலகம், வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுவரும் கனவு துணை வேந்தருக்கு உள்ளது. ஆனால், இதற்கு நிதிப் பற்றாக்குறை தடையாக உள்ளது.
ஆங்கில பயிற்சி வகுப்புகள் அவசியம்... இதுபோல் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கோவை உள்ளிட்ட 7 அரசு சட்டக் கல்லூரிகளின் நிலை, இதைவிட மோசமாக உள்ளது. கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதோடு, உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத நிலையில் உள்ளன.
இந்தக் கல்லூரிகளில் படிக்கும் 90 சதவீத மாணவர்கள் தேர்வுகளை தமிழில் எழுதுகின்றனர். ஆனால், சட்ட புத்தகங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன.
அனைத்து சட்ட புத்தகங்களையும், நீதிமன்றங்களில் தினமும் நடைபெறும் முக்கிய வழக்கு விசாரணைகளையும் தமிழில் மொழி பெயர்ப்பது என்பது இயலாத காரியம். தமிழ் அவசியம் என்றபோதும், ஆங்கிலப் புலமையையும் மாணவர்கள் பெறும் வகையில் அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் ஆங்கில மொழி பயிற்சி வகுப்பை நடத்த அரசு உதவ வேண்டும்.
மற்ற படிப்பகளைப் போல், சட்டக் கல்வி மீதும் அரசின் பார்வை திரும்பவேண்டும் என்றார்.