பராமரிக்கப்படாத ரயில் பெட்டிகள்! தினமும் திண்டாடும் பயணிகள்!
சென்னை, நவ. 21: சென்னையில் இருந்து இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களில், பராமரிக்கப்படாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படுவதால் பயணிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மண்டலத்தில் இப்போது
சென்னை, நவ. 21: சென்னையில் இருந்து இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களில், பராமரிக்கப்படாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படுவதால் பயணிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் இப்போது 210 விரைவு ரயில்களும், 255 பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதுதவிர 690 புறநகர் மின் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை இப்போது 18 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பயணக் கட்டண வருவாயாக . 2,354 கோடி ஈட்டப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் பற்றாக்குறை:
எனினும், ரயில் பெட்டிகளை முறையாகப் பராமரிப்பதில் கடும் தேக்க நிலை உள்ளது. சந்திப்பு ரயில் நிலையங்கள் மற்றும் டெர்மினல் ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு வளாகங்கள் உள்ளபோதும், தொழில்நுட்பப் பணியாளர்கள் முதல் துப்புரவுத் தொழிலாளர்கள் வரை பெரும்பாலான பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
ரயில்கள் இயங்குவதற்குத் தேவையான முக்கிய உதிரிபாகங்களை விநியோகிப்பதிலும் பற்றாக்குறை நிலவுகிறது. ஏற்கெனவே, ரயில் பெட்டிகளுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், நெரிசல் காரணமாக ரயில்களின் சேவைகளை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டிய நிலைக்கு தெற்கு ரயில்வே தள்ளப்பட்டுள்ளது.
இதனால் ரயில் பெட்டிகள் முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில் ஓய்வில்லாத தொடர் பயணமாக இயக்கப்படுகின்றன.
தனியாரிடம் பராமரிப்புப் பணி : தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்னையைக் காரணமாகக் கூறி, இப்போது ஒப்பந்த முறையில் ரயில் பெட்டிகளைப் பராமரிக்கும் பணி தனியாருக்கு ஒப்படைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ரயில் பெட்டிகள் பராமரிப்புக்காக மட்டும் ரூ. 12 கோடியை தெற்கு ரயில்வே ஒதுக்கியுள்ளது.
ரயில் பெட்டிகளின் பராமரிப்பை தனியாருக்கு வழங்கியுள்ளதால், பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறியுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு தினமும் இயக்கப்படும் முக்கிய ரயில்களில் எலி, கரப்பான் பூச்சிகளின் தொல்லை காரணமாக தூங்கும் வசதியுள்ள (பெர்த்) 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.
சென்னை எழும்பூர்- தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில், சென்னை- செங்கோட்டை பொதிகை விரைவு ரயில், சென்னை- திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் உள்ளிட்ட பல்வேறு இரவு நேர ரயில்களில் 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் பெட்டிகள் வட இந்திய மாநிலங்களில் பல ஆண்டுகள் "இடைவிடாத சேவைக்கு' பின் தெற்கு ரயில்வே மண்டலத்துக்குத் தள்ளப்படுவதாகத் தெரிகிறது.
குப்பை வண்டிகளாக...: சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையே தினமும் இயக்கப்படும் சப்தகிரி, திருப்பதி விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் எப்போதுமே நிரம்பி வழியும்.
மிகவும் பழைய ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில்களில் கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுவதோடு கடும் சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் முகம் சுளிப்பதோடு, விரக்தி அடைகின்றனர். பெரும்பாலான ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகளில் அனுமதி பெறாத விற்பனையாளர்கள், "ஓசி' பயணம் செய்வோரும் அச்சமின்றி பயணம் செய்வது இப்போது அதிகரித்து வருகிறது. இவர்களாலும் ரயில் பெட்டிகள் குப்பை வண்டிகளாக மாறும் நிலை உள்ளது.
சில ரயில்களில் மின் விநியோகம் திடீரென பாதிக்கும் நிலையும் உள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்
கின்றனர்.
குளிரில் நடுங்கும் பயணிகள்: திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, ஈரோடு, சேலம், சென்னை வழியாக கோரக்பூர், கோர்பா ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ரப்திசாகர்,
கோர்பா விரைவு ரயில்கள் சென்னை சென்ட்ரலுக்கு இரவு 11.05-க்கு வந்து சேருகின்றன. இந்த ரயில்களில் கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து சென்னைக்கு ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு இரவில் தலையணை, கம்பளி மற்றும் படுக்கை விரிப்புகள் கூட கொடுப்பது இல்லை என்று தெரிகிறது. இதனால், மழை மற்றும் குளிர் காலங்களில் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
நீண்ட தூரப் பயணிகளுக்கு மட்டுமே இந்த வசதி அளிக்கப்படும் என்று ஊழியர்கள் மறுப்பதால் பயணிகள் மிகவும் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர். பயணிகளின் கனிவான கோரிக்கைகளை தெற்கு ரயில்வே கவனிக்குமா?