முகப்பு
சென்னை

ஜூலை இறுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் தொடக்கம்

சென்னை, ஜூலை 16: எழும்பூரை நோக்கி மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் "டனல் போரிங்' இயந்திரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்காவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளத

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சென்னை, ஜூலை 16: எழும்பூரை நோக்கி மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் "டனல் போரிங்' இயந்திரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்காவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 இம்மாத இறுதி வாரத்தில் "டனல் போரிங்' இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணிகளைத் தொடங்கவுள்ளது.

 சென்னை மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணிகளுக்காக சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட "டனல் போரிங்' இயந்திரப் பாகங்களை இணைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது.

Advertisement

 மேலும், சுரங்கப் பணிகளுக்காக வண்ணாரப்பேட்டை, ஷெனாய் நகர், மே தினப் பூங்கா ஆகிய இடங்களிலும் "டனல் போரிங்' இயந்திரங்களை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 இந்தப் பணிகளுக்காக 200 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 23 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, பாதுகாப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு, கான்கிரீட் தரைத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக ரஷியா, சீனாவிலிருந்து சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள், ஜனவரி மாதம் தொடங்கி சென்னைக்கு தனித் தனிப் பாகங்களாக வந்தன. அந்தப் பாகங்கள் இப்போது ஒன்றிணைக்கப்பட்டு, ராட்சத இயந்திரமாக பூமிக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளன.

 "டனல் போரிங்' இயந்திரம்: "டனல் போரிங்' இயந்திரம் 84 மீட்டர் நீளமுடையது. இந்த இயந்திரம் ஆண்டின் 365 நாளும் 24 மணி நேரமும் சுரங்கம் தோண்டும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 20 மீட்டர் வரை சுரங்கம் தோண்டும். பாறைகள் அதிகமிருக்கும் பகுதிகளில் ஒரு நாளைக்கு 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை சுரங்கம் தோண்டும்.

 சுரங்கம் தோண்டும்போதே "டனல் போரிங்' இயந்திரத்தின் மேல் பகுதியில் இருந்து 6 மீட்டர் வட்ட வடிவிலான "சிமென்ட் செக்மன்ட்' பொருத்திக்கொண்டே வரும். இந்த இயந்திரத்தில் 2 பணியாளர்கள் "ஷிப்ட்' முறையில் வேலை செய்து வருவார்கள். அவர்களுக்கு கணினி மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையும் "டனல் போரிங்' இயந்திரத்தில் இருக்கும். "டனல் போரிங்' இயந்திரத்தின் முன்பகுதியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்படும் "பிளேடு'களை மாற்றுவது இந்தப் பணியாளர்களின் முக்கியப் பணி.

 இந்த இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், சீனாவில் இருந்து பணியாளர்கள் வர வழைக்கப்படுகிறார்கள். கடும் மழை பெய்தால்கூட இயந்திரத்தின் பணியில் பாதிப்பு ஏற்படாது.

 நடந்துள்ள பணிகள்: சுரங்க ரயில்பாதை அமைக்கும் பணி, ஐந்து தொகுப்புகளாக நடைபெற்று வருகிறது. தொகுப்பு ஒன்றில், 95 சதவிகித மண் பரிசோதனை முடிந்துள்ளது. நிலம் எடுக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை பஸ் நிலையப் பகுதியில், சுரங்கப் பணிகள் முடிந்துள்ளன.

 சைதாப்பேட்டையில், கழிவுநீர் கால்வாயை மாற்றியமைக்கும் பணி மற்றும் புதிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படும் பணி நடைபெற்று வருகிறது. சுரங்கப் பாதைப் பணிக்காக, பள்ளம் தோண்டும் ஆயத்தப் பணிகள், சேமியர்ஸ் சாலை, தேனாம்பேட்டை, ஜெமினி பாலம் ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன.

 சுரங்க ரயில் நிலையம் அமையும் இடங்கள்: முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம்,எல்.ஐ.சி.,ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை மற்றும் சைதாப்பேட்டை என 11 இடங்களில் சுரங்க ரயில் நிலையம் அமைகிறது.

 இரண்டாவது வழித்தடத்தில், சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கே.எம்.சி., பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம் என ஒன்பது ரயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 20 சுரங்க ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.

 திட்டத்தின் விவரம்: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரை முதலாவது வழித்தடமும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 2-வது வழித்தடமும் என மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்திலான மெட்ரோ ரயில் வழித்தடம் அமைகிறது. 2015- ம் ஆண்டுக்குள் மொத்த பணியையும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments