4.4.1976: காமராஜுக்கு 'பாரத ரத்னா' விருது: அவரது சகோதரி ராஷ்டிரபதியிடம் பெற்றார்
காமராஜுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது பற்றி...
புது டில்லி, ஏப். 3 - ராஷ்டிரபதி பவனில் இன்று நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியில் ராஷ்டிரபதி பக்ருதீன் அலி அகமது 80 பேருக்கு பத்மவிபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார்.
மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது காலஞ்சென்ற காமராஜுக்கும் காலஞ்சென்ற கியானி குர்முக் சிங் முஸாபிருக்கும் வழங்கப்பட்டது. காமராஜுக்கான பாரத ரத்னா விருதை அவரது சகோதரி நாகம்மாள் ராஷ்டிரபதியிடமிருந்து பெற்றுக் கொண்டார். குர்முக் சிங் முஸாபிருக்கான பாரத ரத்னா விருதை அவரது புதல்வர் பெற்றுக் கொண்டார்.
பத்ம விபூஷண் விருது பெற்றவர்கள்: படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரே, பறவைகள் பற்றிய நிபுணர் சலீம் அலி, கார்டூனிஸ்ட் கே. எஸ். பின்ட (சங்கர்), கல்வி நிபுணர்கள் டாக்டர் கே. எல். ஸ்ரீ மாலி, கர்னல். பி.எச்.ஸைதி, விஞ்ஞானி டாக்டர் கே. ஆர். ராமநாதன். ...
Advertisement
கடத்தலில் ஈடுபட்ட அந்நிய நாட்டு விமானம் பம்பாயில் கைப்பற்றப்பட்டது
புதுடில்லி, ஏப். 3 - டிரான்ஸ்மெடிட்டரேனியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த 707 போயிங் விமானத்தை பம்பாய் விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதன் மதிப்பு ரூ. 6 கோடி.
லெபனானிலிருந்து சரக்குகளை எற்றிக் கொண்டு இந்த விமானம் வெள்ளியன்று இரவு டில்லி விமான நிலையத்துக்கு வந்த போது இதை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் 53 பாக்கெட்டுகளை இந்த விமானம் கொண்டு வந்து இறங்கியது. அவை பாதுகாப்பு சாதனங்கள் என்று கூறப்பட்டன. ஆனால் உண்மையில் அவை கடத்தல் கடிகாரங்கள், கணக்கு கருவிகள் என்பது பின்னால் கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள்.
இதற்காகவே மேற்கண்ட விமானம் இப்போது கைப்பற்றப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு இப்படி ரூ.75 லட்சத்துக்கு மேற்பட்ட கடத்தல் பொருள்கள் வந்து கடத்தல்காரர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன என்று சுங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.