அரசு கல்லூரியில் உரிய கல்வித் தகுதியில்லாத பேராசிரியர்
அரசு கலை அறிவியல் கல்லூரியில் உரிய கல்வித் தகுதியில்லாத பேராசிரியரை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் நியமித்திருப்பது, கல்லூரி நிர்வாகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக பிற பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அரசு கலை அறிவியல் கல்லூரியில் உரிய கல்வித் தகுதியில்லாத பேராசிரியரை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் நியமித்திருப்பது, கல்லூரி நிர்வாகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக பிற பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கு, துறைத் தலைவருக்கு அடுத்த நிலை பதவி அளிப்பதற்காக ஆவணங்களை தயார் செய்தபோதுதான், அவர் துறைக்கு தொடர்பில்லாத கல்வித் தகுதியை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கோவை அரசுக் கலை அறிவியல் கல்லூரியில்தான் இந்த குழப்பம். வேதியியல் படிப்பும், உயிரி வேதியியல் (பயோ கெமிஸ்ட்ரி) படிப்பும் இணையானது அல்ல என அரசே பல முறை அரசாணை பிறப்பித்துள்ளபோதும், இந்தக் கல்லூரி வேதியியல் துறையில், உயிரி வேதியியல் பட்டதாரி நியமிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
அண்மையில் ஏப்ரல் 30-ம் தேதி உயர் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.72-லும் எந்தெந்த படிப்புகள் இணையானவை, எவை இணையானவை அல்ல என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
Advertisement
அதாவது, பி.எஸ்சி. உயிரி வேதியியல் படிப்பு பி.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது அல்ல என்றும் எம்.எஸ்சி. உயிரி வேதியியல் படிப்பு எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக தலைவர் எஸ். தமிழ்மணி கூறியது:
சென்னை ராணி மேரிக் கல்லூரியில் உயிரி வேதியியல் துறையில் பணிபுரிந்து வந்த இந்தப் பேராசிரியரை, முதலில் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு கல்லூரிக்கு கல்லூரி கல்வி இயக்குநரகம் பணிமாற்றம் செய்து, பின்னர் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு மாற்றம் செய்தது.
இந்த இரு அரசுக் கல்லூரிகளிலும் உயிரி வேதியல் துறை இல்லை. இதன் காரணமாக அப்போதைய கல்லூரி நிர்வாகம் இவரை வேதியியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணி ஏற்கச் செய்துள்ளது. உயிரி வேதியியல் பாடங்களுக்கும், வேதியியல் பாடங்களுக்கும் 95 சதவீதம் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இதன் காரணமாகவே தமிழக அரசு, இந்த இரண்டு படிப்புகளும் இணையானவை அல்ல என பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்வாறு, உரிய கல்வித் தகுதியில்லாத பேராசிரியர் துறையில் நியமிக்கப்படுவது மாணவர்களை பாதிக்கும் என்பதோடு, பதவி உயர்வு என்று வரும்போது உரிய தகுதிபெற்ற பேராசிரியர்களிடையேயும், கல்லூரி நிர்வாகத்திடையேயும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
இந்த விவகாரம் தொடர்பாக கோவை அரசு கல்லூரி முதல்வர் பலமுறை புகார் தெரிவித்தும், கல்லூரி கல்வி இயக்குநரகம் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்தப் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்றார்.