கடற்கரை ரயில் நிலையம் அருகே புதிய பஸ் நிறுத்தம்
சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே மாநகர பஸ்கள் நிற்பதற்கு ஏற்ற வகையில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்குள்ள
சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே மாநகர பஸ்கள் நிற்பதற்கு ஏற்ற வகையில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்குள்ள சுமார் 41 கடைகளை அகற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை கடற்கரை ரயில் நிலையம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். மேலும் வட சென்னை பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு பிரதான சாலையாக இருப்பது ராஜாஜி சாலையாகும்.
கடற்ககரை ரயில் நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். புறநகர் ரயிலின் கடைசி ரயில் நிலையமும் இதுவாகும்.
Advertisement
தென் சென்னை மற்றும் புறநகர் பகுதியிலிருந்து வடசென்னைக்கு செல்பவர்கள் கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி மாநகர பஸ் மூலமாக சென்று வருகின்றனர். அதே போல, வடசென்னையிலிருந்து வருபவர்களும் கடற்கரை ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இதனால், கடற்கரை ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். ஆனால் பஸ் நிறுத்தம் பயணிகளுக்கு வசதியாக இல்லை.
தனிப் பாதை: கடற்கரை ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் பஸ் வழிப்பாதைக்கென சாலையில் தனி இட வசதி இல்லை. அனைத்து பஸ்களும் சாலையின் நடுவே நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காண பஸ் வழிப்பாதையை அகலப்படுத்த தெற்கு ரயில்வேயுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கடைகள் அகற்றம்: சாலையை அகலப்படுத்தி புதிய பஸ் நிறுத்தம் அமைக்க கடற்கரை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள 41 கடைகளை அகற்ற சென்னனை மாநகராட்சி முடிவு செய்துள்ளளது. இது குறித்த ஆலோசனைகளை தெற்கு ரயில்வேயுடன் இணைந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது கடற்கரை ரயில் நிலையத்தை அகலப்படுத்தி 3 பஸ்கள் நிறுத்தப்படும் வகையில் புதிய பஸ் நிறுத்தம் அமைப்பது. அந்த இடத்தில் மாநகர பஸ்கள் மட்டுமே நின்று செல்லும் என்பதால், சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இதை அமைப்பது. இதன் மூலம் சாலையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
நடை மேம்பாலம்: பயணிகள் நலனை கருத்தில்கொண்டு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து எதிர்புறம் உள்ள பாரத ஸ்டேட் வங்கி பஸ் நிறுத்தம் செல்வதற்கு நடை மேம்பாலம் அமைக்கவும் மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து பூங்கா நகர் பஸ் நிலையம் வழியாக உள்ள சாலையை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதேபோல திருவல்லிக்கேணி பகுதியில் விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள சேப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு செல்ல ஏதுவாக, சாலையை அகலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.