முகப்பு
சென்னை

பொக்காபுரம் வனப் பகுதியில் விதிமீறிக் கட்டப்படும் விடுதிகள்!

நீலகிரி மாவட்டம், முதுமலை வனச் சரணாலயத்துக்கு உள்பட்ட பொக்காபுரம் வனப் பகுதியில் விதிகளை மீறி

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

நீலகிரி மாவட்டம், முதுமலை வனச் சரணாலயத்துக்கு உள்பட்ட பொக்காபுரம் வனப் பகுதியில் விதிகளை மீறி சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
 தேசிய விலங்கான புலிகளைக் காக்க, புலிகள் சரணாலயத்தின் உள்பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
 இதையடுத்து முதுமலை புலிகள் சரணாலயத்தைச் சுற்றி இயங்கி வந்த பல்வேறு தனியார் விடுதிகள் உடனடியாக மூடப்பட்டன. மேலும், வனத் துறை சார்பில் சரணாலயத்தின் வெளிப் பகுதிகளில் அரசே பொது மக்களுக்கான சுற்றுலாவை நடத்தி வருகிறது.
 முதுமலை காப்பிடத்துக்குள் வரும் மசினக்குடி, பொக்காபுரம், மோயாறு ஆகியவை மிகப்பெரும் சுற்றுலா வர்த்தகத் தலம். இங்கு பல தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. நீதிமன்ற உத்தரவால் மசினக்குடியில் தனியார் சுற்றுலாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தடையையும் மீறி பல்வேறு சுற்றுலா நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
 மேலும், பொக்காபுரம் வனப் பகுதியில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் இயங்குகின்றன. இந்தப் பகுதியில் கட்டப்படும் விடுதிகள் அனைத்தும் பெரு நிறுவனங்களுக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.
 மேலும், இந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளன. சில நேரங்களில் யானைகள் விடுதிகளுக்கு உள்ளே புகும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன.
 இரவு சுற்றுலா: முதுமலை வனச் சரணாலயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நைட் சஃபாரி, அதாவது இரவு நேரங்களில் வனப் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று விலங்குகளைப் பார்வையிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பல தங்கும் விடுதிகள் நைட் சஃபாரியை விதியை மீறி இயக்கி வருகின்றன. இது சுற்றுலா செல்லும் பொது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
 இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 முதுமலையைச் சுற்றியுள்ள விடுதிகள் பல விதிகளை மீறி இயங்குவது உண்மைதான். 2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, இங்கு விதிகள் மீறுவது அதிகரித்துள்ளது. அவ்வப்போது, நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாதான் வனங்களின் மீது மக்களின் ரசனையையும், விருப்பத்தையும் அதிகரிக்கிறது. வன விலங்குகள் மீதான பற்றையும் வளர்க்கிறது. இதை வாய்ப்பாகக் கருதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக மனித நடமாட்டமே இல்லாத பகுதியாக வனத்தை மாற்றக்கூடாது.
 சுற்றுலா என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவது உண்மை என்றாலும், அதை முறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றார் அவர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments