அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது
அகில இந்திய அளவில் கடந்த நான்கு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த புலிகள் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் கடந்த நான்கு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த புலிகள் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு 4 ஆவது இடம்: 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, புலிகளின் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு நான்காவது இடம் கிடைத்தது. தமிழகத்தில் மொத்தம் 229 புலிகள் உள்ளதாக தெரிய வந்தது.
தமிழகத்தில் களக்காடு - முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் பாதுகாப்பு சரணாலயங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழக வனத்துறையின் கணக்கெடுப்புப்படி சத்தியமங்கலத்தில் 64 புலிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் முதுமலையில் 43-க்கும் அதிகமான புலிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
உயிரிழப்புகள்: தமிழகத்தில் 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை மொத்தம் 24 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. அதேநேரத்தில், கடந்தாண்டில் (2015) தமிழகத்தில் 6 புலிகள் மட்டுமே உயிரிழந்துள்ளன. 2016 இல் மூன்று புலிகள் உயிரிழந்துள்ளன.
பொது மக்களை திருப்திப்படுத்தவே...: பொதுமக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே வனத் துறை அதிகாரிகள் புலிகளை சுட்டுக் கொல்கின்றனர் என்று சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வேறு சிலர் ஆள்கொல்லி புலிகளை உயிரியல் பூங்காக்களில் வைத்து பராமரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 3 ஆள்கொல்லி புலிகள் வனத் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா
அருகே அட்டபெட்டு, குந்தசப்பை ஆகிய பகுதிகளில் 3 பேரை புலி அடித்துக் கொன்றது. இதையடுத்து, அந்தப் புலி சுட்டுக் கொல்லப்பட்டது. 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி கூடலூரில் பெண்ணைக் கொன்ற புலி சுட்டுக் கொல்லப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகத்துக்கு வெளியே அல்லது அதை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்திலும் விவசாய நிலங்கள் உள்ளன.
அங்கு விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்க்கின்றனர். புலிகள் காப்புக் காடுகளைவிட்டு வெளியே செல்லும்போது இந்த ஆடு, மாடுகளைக் கொன்றுவிடுகின்றன. இதனால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
புலிகள் எப்போதும் தனது இரையை 4 நாள்கள் வைத்து உண்ணும் பழக்கம் கொண்டவை. புலி மிச்சம் வைத்துச் செல்லும் இரையில் கிராம மக்கள் விஷம் தடவி வைத்துவிடுகின்றனர். இதை அறியாத புலி அந்த விஷம் கலந்த இரையை உண்டு உயிரிழக்கிறது. கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரமான ஆடு, மாடுகளை இழப்பதால், புலியை விஷம் வைத்துக் கொல்கின்றனர். இது சட்டப்படி குற்றமாகும். மேலும், கிராம மக்களுக்கு புலிகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அப்போதுதான் புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்படுவதைத் தவிர்க்க முடியும் என்றார் அவர்.