சென்னை அருகே குன்றத்தூரில் நகைக்காக தாயைக் கொன்ற வழக்கில் தேடப்பட்ட மகன் மும்பையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
குன்றத்தூர் சம்பந்தன்நகர் ஸ்ரீராம் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். மனைவி சரளா. மகன் தஷ்வந்த். இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு வரை போரூர் மதனந்தபுரம் மாதா நகரில் வசித்தனர். அங்கு தஷ்வந்த் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தார். இவ்வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த அவரை வெளியே கொண்டுவர பெற்றோர் முயற்சி எடுத்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் குன்றத்தூருக்கு இடம் பெயர்ந்தனர்.
சிறையில் இருந்து ஜாமீனில் செப்டம்பர் மாதம் வெளிவந்த தஷ்வந்த் பெற்றோரிடம் செலவுக்குப் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால் பெற்றோருக்கும், தஷ்வந்துக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி வீட்டில் இருந்த தஷ்வந்த், தாய் சரளாவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் தர மறுத்ததால் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு, கழுத்தில் இருந்த 25 சவரன் நகைகளை எடுத்துச் சென்றுள்ளார் தஷ்வந்த். குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய தஷ்வந்தை தேடினர். தஷ்வந்துக்கு குதிரை பந்தயம், சூதாட்டம் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம் என்பதால் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பிரபலமான கிளப்புகள், ரேஸ் மையங்கள் ஆகியவற்றுக்கு சென்னை தனிப்படை போலீஸார் தகவல் அனுப்பி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மும்பையில் கைது: இந்நிலையில், மும்பை ரேஸ்கோர்ஸில் தஷ்வந்த் இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மும்பை சென்ற போலீஸார் தஷ்வந்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தஷ்வந்த் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.