வாசகர்களின் வருகைக்காக ஏங்கும் நேரு பூங்கா கிளை நூலகம்
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நேரு பூங்கா அரசு கிளை நூலகத்தில் அனைத்து வசதிகள் இருந்தும் வாசகர்களின்
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நேரு பூங்கா அரசு கிளை நூலகத்தில் அனைத்து வசதிகள் இருந்தும் வாசகர்களின் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என புத்தக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டடத்தின் தரைத் தளத்தில் நேரு பூங்கா கிளை நூலகம் அமைந்துள்ளது. நாள்தோறும் காலை 8 மணி முதல் காலை 11.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இந்த நூலகம் செயல்படுகிறது.
5 முதல் 10 வாசகர்கள் மட்டுமே வருகை: இந்த நூலகத்தில் வரலாறு, அறிவியல், தத்துவம், ஆன்மிகம், இலக்கியம், வேளாண்மை சார்ந்த நூல்கள், முன்னணி எழுத்தாளர்களின் நாவல்கள், அகராதிகள், போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகள் என 1.54 லட்சம் நூல்கள் உள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்கான கதை, கட்டுரை நூல்களும், 15-க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில நாளிதழ்கள், 10-க்கும் மேற்பட்ட வார இதழ்களும் இங்கு உள்ளன.
இடவசதி, நூலக உபகரணங்கள், மின்சாரம், தேவையான அலமாரிகள், சொந்தக் கட்டடம், பிரதான அமைவிடம் என அனைத்து அடிப்படை வசதிகளும் இருந்தும் கூட இங்கு நாள்தோறும் 5 முதல் 10 வாசகர்கள் வரை வருவதே அரிதாகி விட்டது.
பிரதான நுழைவாயில்கள் மீண்டும் திறப்பு: இதுகுறித்து இந்த நூலகத்தின் நீண்ட கால வாசகர்களான சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த டி.பழனிசாமி, கே.கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது: கடந்த 1984-இல் முழு நேர கிளை நூலகமாகத் தொடங்கப்பட்டபோது, நாள்தோறும் 150 முதல் 200 வாசகர்கள் வரை வந்தனர். ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்ததால், கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் இது கிளை நூலகமாகச் செயல்படத் தொடங்கியது.
கடந்த 2012-இல் நேரு பூங்கா பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதை அமைக்கப்பட்டபோது, இந்த நூலகத்தின் இரு நுழைவாயில்களும் மூடப்பட்டன. இதையடுத்து, நூலகத்தின் பக்கவாட்டுப் பகுதியில் கெங்குரெட்டி பால சாலையில் உள்ள சிறிய நுழைவாயில் வழியாக ஒருசில வாசகர்கள் வந்து சென்றனர். தற்போது, மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரதான நுழைவாயில்கள் திறக்கப்பட்டன. வாசகர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட இந்த நூலகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வாசகர்களை அதிகரிக்க நடவடிக்கை: இதுகுறித்து சென்னை மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ சந்திரகுமார் கூறியதாவது: நேரு பூங்கா கிளை நூலகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பகுதி மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் நூலகத்தின் சுற்றுப் பகுதிகளில் உள்ள மூன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களிடம் உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு விடுப்பதுடன், மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போன்ற போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வாசகர்களின் வருகையை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.