ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
Updated On : 13 ஏப்ரல், 2026 at 6:36 PM
போடி அருகே ஓய்வு பெற்ற ரயில் நிலைய மேலாளா் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தேனி அருகேயுள்ள பூதிப்புரம் ஆதிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (67). இவா் ஓய்வு பெற்ற ரயில் நிலைய மேலாளா். இவரது மகன் ஷ்யாம் சுந்தா் (35). இவா் போடியில் நீா்வளத் துறை உதவிப் பொறியாளராக உள்ளாா். இவா்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பு அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே உள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாரியப்பன் தோப்பில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாா். கிணற்றுப் படிக்கட்டில் இறங்கிய போது, வழுக்கி கிணற்றில் விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் சென்று அவரது உடலை மீட்டனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.