வருமான வரித் துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை அரசியல் நோக்கத்துக்காக மத்திய அரசு பயன்படுத்துவது உறுதியாகி இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
வரி ஏய்ப்போர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மார்கிச்ஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. ஆனால், சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினருக்குச் சொந்தமான 200 இடங்கள், 1800 அதிகாரிகள், 20,000 காவலர்கள் என ஒரு படையெடுப்பை போல வருமான வரிச் சோதனை நடத்தியிருப்பது, நேர்மையான நோக்கத்துக்கு அப்பாற்பட்டதாகவே தெரிகிறது.
சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் சோதனை செய்தபோது எடுக்கப்பட்ட டைரியில் உள்ள விவரங்களின் அடிப்படையில், இதுவரை எந்தவித வருமான வரித் துறை சோதனையும் நடத்தப்படவில்லை. அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு ரூ. 89 கோடி பணம் ஆர்.கே. நகரில் விநியோகித்ததாக சொல்லப்பட்டது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் வருமான வரித்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.
வருமான வரித் துறை, சிபிஐ அமைப்புகள் மத்திய அரசின் நோக்கங்களை நிறைவேற்றவே பயன்படுத்தப்படுகின்றன என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது. அது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சசிகலா, தினகரன் உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனைகளை, அரசியல் உள்நோக்கம் உடையதாகவே மார்க்சிஸ்ட் கட்சி பார்க்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.