தரமணியில் சுற்றித் திரிந்த 33 புள்ளிமான்கள் மீட்பு
சென்னை தரமணி பகுதியில் சுற்றித்திரிந்த 33 புள்ளிமான்களை வனத்துறையினர் திங்கள்கிழமை மீட்டனர்.
சென்னை தரமணி பகுதியில் சுற்றித்திரிந்த 33 புள்ளிமான்களை வனத்துறையினர் திங்கள்கிழமை மீட்டனர்.
சென்னை தரமணியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 26 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 3 0-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தன. இந்நிலையில், அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக அங்கிருந்த மரம், செடிகளை தனியார் நிறுவனத்தினர் அண்மையில் அழித்தனர். இதையடுத்து, அந்த இடத்தில் வசித்த வந்த புள்ளிமான்கள் உணவில்லாமல் தவித்து வந்தன. அப்பகுதியில் உணவகங்களில் இருந்து கொட்டப்படும் மீதமான உணவுகளையும், பொதுமக்கள் தரும் பழம் உள்ளிட்ட உணவுகளையும் சாப்பிட்டு புள்ளிமான்கள் வாழ்ந்து வந்தன. மேலும், வனத்துறை சார்பிலும் புள்ளிமான்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
33 புள்ளி மான்கள் மீட்பு: இந்நிலையில், கிண்டி வன உயிரினக் காப்பாளர் கீதாஞ்சலி மேற்பார்வையில் தரமணியில் சுற்றித் திரியும் புள்ளிமான்களைப் பிடிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பணியில், வனச்சரகர், வனவர்கள் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட வனத் துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், 33 புள்ளிமான்கள் வலைகள் மூலம் உயிருடன் பிடிக்கப்பட்டன.
இதுகுறித்து வன உயிரினக் காப்பாளர் கீதாஞ்சலி கூறும்போது, 'தற்போது, தரமணி பகுதியில் இருந்த 33 புள்ளிமான்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த மான்கள் அனைத்தும் கிண்டி சிறுவர் பூங்காவில் விடப்படுகின்றன. நோய்த் தொற்று குறித்து பரிசோதித்த பின்னர், அவை அனைத்தும் கிண்டி தேசிய பூங்காவில் விடப்படும். மேலும், தரமணி பகுதியில் சுற்றித் திரியும் 5 மான்கள் ஓரிரு நாள்களில் பிடிக்கப்படும்' என்றார் அவர்.