முகப்பு
சென்னை

மாநகராட்சி கடைகளின் வாடகை உயர்வை குறைக்க வியாபாரிகள் கோரிக்கை

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கான வாடகை சுமார் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Updated On : 19 ஏப்ரல் 2018, 4:25 am IST
பகிர்:

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கான வாடகை சுமார் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என திருவொற்றியூர் மண்டல மாநகராட்சி கடை வாடகைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாடகைதாரர்கள் சங்க நிர்வாகி நி. நித்தியதாசன் கூறியது: மாநகராட்சியுடன் திருவொற்றியூர், கத்திவாக்கம் நகராட்சிகள் இணைக்கப்பட்டன. இதையடுத்து வாடகை உயர்வுக்கு மாநகராட்சியின் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. மேலும் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், உயர் நீதிமன்றம் தலையிட்டு வாடகை உயர்வை அமல்படுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஒருங்கிணைந்த சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் கடந்த பிப், 2017-ல் வாடகை உயர்வு அறிவிக்கப்பட்டது.
இந்த வாடகை உயர்வு மிகவும் பாரபட்சமானது. 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த பழைய சென்னை மாநகராட்சி கடைகளுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை உயர்த்தப்பட்டு வந்த இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கடைகளுக்கும் ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. சதுர அடிக்கு ரூ. 40 முதல் அதிகபட்சம் ரூ. 60-வரை வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே அமைந்துள்ள வணிக வளாகத்தில் வாடகை உயர்வுக்கு முன்பு சதுர அடிக்கு ரூ. 9 -வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இதே கடைக்கு ரூ. 40 உயர்த்தப்பட்ட கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் சேவை வரி என்ற பெயரில் வாடகை கட்டணத்தில் 18 சதவீதம் விதிக்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் சேவை வரி விதிக்கப்படுவது எப்படி என்பது தெரியவில்லை. ஆக ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ. 47 செலுத்த வேண்டும். உதாரணமாக ரூ. 10 ஆயிரம் வாடகை செலுத்திய வாடகைதாரர்கள் தற்போது ரூ. 55 ஆயிரம் செலுத்த வேண்டும். இது சாத்தியமானது அல்ல. இத்தகைய வாடகை உயர்வை நாங்கள் எவ்வாறு செலுத்த முடியும். பொருளாதார மந்தநிலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் உள்ளிட்டவைகளால் தொழில்கள் முடங்கியுள்ளன. 
எனவே இந்த வாடகை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். பின்னர் முறையாக மதிப்பீடு செய்து நியாயமான முறையில் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் பாரபட்சமற்ற முறையில் வாடகையை உயர்த்த வேண்டும். புதிதாக இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் இதே பிரச்னை உள்ளது. எனவே இப்பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடித் தீர்வு காண வேண்டும் என நித்தியதாசன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.