தெய்வ பக்தி போல் தேசபக்தி நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று இந்திய இளைஞர் சங்கத் தலைவரும் துக்ளக் ஆசிரியருமான எஸ். குருமூர்த்தி கூறினார்.
இந்திய இளைஞர் சங்கம் சார்பில் சென்னை மயிலாப்பூரில் சுதந்திர தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. எஸ்.குருமூர்த்தி முன்னிலையில் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் குருமூர்த்தி, தேசபக்தியே ஒவ்வொரு நாட்டுக்கும் உணர்வு ரீதியான அடிப்படை. இந்த நாட்டையும் மக்களையும் இணைக்கும் முக்கியமான நாளாக விடுதலை நாள் இருக்கிறது. எப்படி தெய்வபக்தி மனநிலை நிரந்தரமாக இருக்கிறதோ அதே போல் தேசபக்தியும் நிரந்தரமாக இருக்க வேண்டும். தெய்வபக்தி எப்படி விழாவாக வெளிப்படுகிறதோ, அதேபோல் சுதந்திர தினமும் இருக்க வேண்டும். சுதந்திர தினத்தில் மட்டும் இருப்பது தேசபக்தி அல்ல என்றார்.
இந்திய இளைஞர் சங்கத் துணைத் தலைவர் வி. முரளி, மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ், இந்திய இளைஞர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் எஸ்.ராஜரத்தினம், ஜி.நாராயணசுவாமி, ஜி.சுப்ரமணியன், கெளரவச் செயலர் கே.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.