தேடப்பட்ட 5 ரௌடிகள் காவல் நிலையத்தில் சரண்
சென்னையில் தேடப்பட்டு வந்த 5 ரௌடிகள் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
சென்னையில் தேடப்பட்டு வந்த 5 ரௌடிகள் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
பூந்தமல்லி அருகே மலையம்பாக்கத்தில் கடந்த 6-ஆம் தேதி இரவு சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ரௌடி பினுவின் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரௌடிகளை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 76 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர், ரௌடி பினு உள்ளிட்ட 25 பேர் தப்பியோடினர்.
தப்பியோடிய பினு கடந்த 12-ஆம் தேதி அம்பத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்தார். அதேபோல அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரௌடி ராதாகிருஷ்ணனை போலீஸார் தேடினர். தலைமறைவாக இருந்த ராதாகிருஷ்ணன், சேலம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சரணடைந்தார். இதேபோல ராதாகிருஷ்ணனின் கூட்டாளி ஆர்ச் வினோத்தும், அமைந்தகரை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் ரௌடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தப்பியோடிய, அவரது கூட்டாளிகள் சூளைமேட்டைச் சேர்ந்த கனகு என்ற கனகராஜ் (31), விக்கி என்ற விக்னேஷ் (23), திண்டுக்கலைச் சேர்ந்த சரவணன் (25) ஆகியோர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர். இதேபோல ரௌடி சி.டி.மணியின் கூட்டாளிகள் ராம்குமார் தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும், அவரது ஓட்டுநர் ஹரி கோட்டூர்புரத்திலும் சரணடைந்தனர். இவர்களிடம் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.