சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் முறைகேடு: மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்றுள்ள ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்
மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்றுள்ள ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான கூட்டமைப்பினர் சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான அகில இந்திய கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில், சென்னை புரசைவாக்கத்தில் திங்கள்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்ஸி ராணி, மனவளர்ச்சி குன்றியோருக்கான கூட்டமைப்புச் செயலர் எம். ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுச் செயலர் எஸ்.நம்பிராஜன் முன்னிலை வகித்தார். 150-க்கும் அதிகமான மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், தங்களின் பெற்றோருடன் பங்கேற்றனர்.
மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் ஊழல் முறைகேடு செய்துள்ள தமிழ்நாடு ஏரியா இயக்குநர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை முடியும் வரை தமிழகத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கூறியது:
மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் ஊழல் முறைகேடு செய்துள்ள தமிழ்நாடு ஏரியா இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,, அலுவலகத்தை முற்றுகையிட வந்தோம். ஆனால், அந்த முகவரியில் சிறப்பு ஒலிம்பிக் அலுவலகம் செயல்படுவதற்கான பெயர் பலகைக் கூட இல்லை. கோடிக்கணக்கில் அரசு நிதியைப் பெறும் ஒரு விளையாட்டு கமிட்டிக்கு பெயர் பலகைக் கூட இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றனர்.